செந்தில் பாலாஜியை சுத்து போடும் இ.டி!  மூன்று வழக்குகளும் ஒருவழக்காக மாற்ற முயற்சி! 500 பேருக்கு சம்மன்!  

செந்தில் பாலாஜியை சுத்து போடும் இ.டி!   மூன்று வழக்குகளும் ஒருவழக்காக மாற்ற முயற்சி! 500 பேருக்கு சம்மன்!  

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,

 கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2015 வரையிலான அதிமுக ஆட்சியில், செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 81 பேரிடம் பணம் பெற்று ரூ.1.62 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்த நிலையில், அது தொடர்பாக 2018-ம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடி சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

  அதன் மீதான விசாரணை நடந்த போது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்னிலையில் செந்தில் பாலாஜி ஆஜர் ஆனார். இந்த வழக்கு நிலுவையில் இருந்த போதே, பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரும்ப கொடுக்கப்பட்டதாகவும், இதனால் இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்று செந்தில் பாலாஜி உள்ளிட்ட இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது.

  அப்படியிருக்க இந்த வழக்கை ரத்து செய்யக்கூடாது என்றும், லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவின் கீழ் புதிதாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்றும், 2 மாதத்தில் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டது. (சுப்ரீம் கோர்ட்டு விதித்த 2 மாத காலக்கெடு முடிந்துவிட்ட நிலையில், மேலும் 6 மாதம் காலஅவகாசம் கேட்டு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்)

  மேலும் முறைகேடாக பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் உள்ளிட்டவர்கள் மீது அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்தது. பின்னர்  நடத்தப்பட்ட ரைடும், பின்னர் இருதயத்தில் ரத்த குழாயில் அடைப்பு இருப்பது தெரிய வந்ததால், பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டதும், சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  நீதிமன்ற காவலில் இருந்ததும், அதை அடுத்து அவர் தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதையும் அறிவோம்.

   இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், செந்தில் பாலாஜி உள்ளிட்டவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவின் கீழ் புதிதாக வழக்குப்பதிவு செய்து அடுத்தகட்ட விசாரணை நடத்தி வருகிறார்கள்.

   அந்த வகையில் மொத்தம் 3 வழக்குகள் உள்ளன. அது தொடர்பாக சம்மன் அனுப்பி 500 பேர் வரை விசாரித்து விட்டதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர். மேலும் 3 வழக்குகளை ஒரே வழக்காக மாற்றுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.