சமூக நீதி என்றால் ஸ்டாலினுக்கு என்னவென்றே தெரியாது! தேர்தல் பிரச்சாரத்தில் அன்புமணி!

ஜி.கே.சேகரன்,
சமூக நீதி என்றால் ஸ்டாலினுக்கு என்னவென்றே தெரியாது இந்த நேரம் கருணாநிதி முதல்வராக இருந்திருந்தால் சமூக நீதியுடன் வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை அளித்திருப்பார். ஆனால் ஸ்டாலினுக்கு சமூக நீதிபற்றி தெரியவில்லை - தமிழ் தமிழ் என்று சொல்லும் திமுக ஆட்சியில் தமிழை படிக்காமலே பட்டம் பெறும் நிலை வேறு எந்த மாநிலத்திலும் தாய் மொழி படிக்காமல் பட்டம் பெற முடியாத இந்த அவலம் தமிழகத்தில் மட்டும் தான் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அரக்கோணம் மற்றும் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. - பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில், வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக புதிய நீதிகட்சியைச் சேர்ந்த ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணிராமதாஸ் பிரச்சாரகூட்டத்தில் பங்கேற்று பேசினார். அணைக்கட்டு பகுதியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாமக மாவட்ட செயலாளர் இளவழகன்,மாவட்டத்தலைவர் வெங்கடேசன், மாவட்ட அமைப்பு செயலாளர் அக்னி வேல்முருகன், முன்னாள் அமைச்சர்கள் சண்முகம், வேலு மற்றும் திரளான பொதுமக்களும் பங்கேற்றனர்.
அதே போன்று அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வழக்குரைஞர் பாலுவை ஆதரித்து அன்புமணிராமதாஸ் கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்த கூட்டத்தில் பாமக நிர்வாகிகள் துளசிராமன்,அ.ம.கிருஷ்ணன்,சக்கரவர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் அன்புமணிராமதாஸ் பேசுகையில், திமுக தமிழ் மொழியை வைத்து தமிழ் தமிழ் என்று பேசி ஆட்சிக்கு வந்தனர். ஆனால் மற்ற மாநிலங்களான கேரளா கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் எல்லாம் தாய் மொழியை படிக்காமல் உயர் கல்வியில் பட்டம் பெற முடியாது.
ஆனால் தமிழகத்தில் மட்டும் தாய் மொழியான தமிழை படிக்காமல் பட்டம் பெற முடியும். இந்த அவலம் தமிழகத்தில் மட்டும் தான் உள்ளது. இது தான் இவர்கள் தமிழை வளர்த்த லட்சணம்,மேலும் 10.5 வன்னியர் இட ஒதுக்கீடு என்பது சமூக நீதி அது உரிமை.
இதுகுறித்து இந்த நேரம் முதல்வராக கருணாநிதி உயிருடன் இருந்திருந்தால் முதலில் கையெழுத்து போட்டு வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை வழங்கி இருப்பார். ஆனால் ஸ்டாலினுக்கு இதை பற்றி எல்லாம் தெரியாது அதை சொல்லி கொடுக்கவும் அவருக்கு ஆள் இல்லை.
காரணம் அவரை சுற்றி 4 அமைச்சர் இருக்கிறார்கள், அவர்கள் தமிழகத்தை கூறு போட்டு விற்கின்றனர் ஆனால் திமுகவில் சில நல்ல அமைச்சர்களும் இருக்கின்றனர். ஆனால் ஸ்டாலினுக்கு சமூக நீதி என்றால் என்னவென்றே தெரியாது அவருக்கு நாங்கள் தான் பாடம் எடுக்க வேண்டும்.
அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி, நான் வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கினேன் என்று சொல்கிறார். ஆனால் அவர் அதனை முழுமையாக முழு மனதுடன் வழங்கவில்லை. ஆகவே தான் நீதிமன்றம் அதனை ரத்து செய்தது. இளைஞர்களை போதையிலிருந்து மீட்க நீங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என பேசினார்.