எஸ்.பி. ஆபிசுக்குள் நுழைந்த பா.ம.க.வினர்! புகார் வழங்க சென்றதால் பரபரப்பு!
கு.அசோக்,
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிப்பதற்காக சுமார் 250 க்கும் மேற்பட்ட பாமகவினர் எஸ்.பி அலுவலகத்துக்குள் நுழைந்தனர். இதற்கு சத்துவாச்சாரி போலீசாரின் மெத்தனமே காரணம் என்று கூறப்படுகிறது.
பாட்டாளி மக்கள் கட்சியினர் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் மருத்துவர் அன்புமணிராமதாஸ் மீது அவதூறாக பேசிய திமுக முன்னாள் நிர்வாகி குடியாத்தம் குமரன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளிப்பதற்காக வந்த போது - காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையில்,மாநிலதுணை தலைவர்கள் என்டி.சண்முகம், இளவழகன், மாவட்ட செயலாளர்கள் ரவி, ஜெகன்,அமைப்புசெயலாளர் அக்னிவேல்முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் காவல் கண்காணிப்பாளர் மதிவாணணை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைவர் மருத்துவர் அன்புமணிராமதாஸ் ஆகியோரை குடியாத்தத்தை சேர்ந்த திமுக முன்னாள் நிர்வாகியும் பேச்சாளருமான குடியாத்தம் குமரன் என்பவர் யூடியூப் சேனலில் தரக்குறைவான அவதூறுகளை இணையத்தில் பரப்பினார்.
எனவே அவரை சட்டபடி கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், அந்த யூடியூப் சேனலை முடக்க வேண்டுமென புகார் மனுவை அளித்தனர்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
இதற்கு முன்னேற்பாடாக எஸ்.பி.அலுவலக பிரதான சாலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பாமகவினர் காலை முதலே குழு குழுவாக கூடினர்.
இது குறித்து உளவுத்துறை பார்வைக்கு சென்றதும் அவர்களும் தங்கள் பணியை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். முன் கூட்டியே தகவலும் அளித்துவிட்டனர். ஆனாலும் கூட சத்துவாச்சாரி போலீசார் மெத்தனமாக இருந்ததால் புகார்ர் அளிப்பதற்காக அங்கு கூடியிருந்த சுமார் 250 பேரும் எஸ்.பி.அலுவலகத்துக்குள் நுழைந்துவிட்டனர்.
புகார் அளிக்க சென்றவர்கள் சாத்வீக முறைப்படி நடந்துக் கொண்டதால் அங்கு எந்த பிரச்சனையும் எழவில்லை.
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட பாமகவினரால் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் குடியாத்தம் குமரன் மீது போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையாம். ஆனால் அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறதாம்.
அது சரி.