மதிப்பிற்குரிய பொருளாதார நிபுணர் மன்மோகன்சிங் மறைந்தார்! பிரதமர் மோடி உருக்கம்!

மதிப்பிற்குரிய பொருளாதார நிபுணர் மன்மோகன்சிங் மறைந்தார்! பிரதமர் மோடி உருக்கம்!

ம.பா.கெஜராஜ்,

 இந்தியாவின் 14-வது பிரதமராக பதவி வகித்த  பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் நேற்று மறைந்தார். அவருக்கு வயது 92. அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உட்பட பல்வேறு தலைவாகளும் இரங்கல் தெரிவித்தனர்.

     மன்மோகன்சிங் கடந்த 1932 செப்.26-ல் மேற்கு பஞ்சாபில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) பிறந்தவர். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் கடந்த 1991-96 நரசிம்மராவ் தலைமையிலான அமைச்சரவையில் நிதி அமைச்சராக பதவி வகித்தார்.

   பொருளாதார வல்லுநரான இவர் இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் தொடக்கத்துக்கு வித்திட்டவர். ரிசர்வ் வங்கியின் கவர்னராகவும் பதவி வகித்துள்ளார்.

  காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 2004 மே மாதம் முதல் 2014 மே மாதம் வரை என தொடர்ந்து 2 முறை  பிரதமராக பதவி வகித்தார்.

   மன்மோகன் சிங்குக்கு ஏற்கெனவே இதயநோய்  இருந்த நிலையில், நேற்று இரவு அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

   தொடர்ந்து நினைவிழந்து மயக்கமும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

  அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்து வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

  இந்நிலையில், மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மன்மோகன் சிங் நேற்று இரவு காலமானார்.

 மன்மோகன் சிங், ரிசர்வ் வங்கி கவர்னராக 1982 முதல் 1985 வரை பணியாற்றினார். 1985 முதல் 1987 வரை திட்டக்குழு துணைத் தலைவராக இருந்தார். 1990-91 வரை பிரதமரின் பொருளாதார ஆலோசகராகவும் பணி யாற்றினார்.

  மன்மோகன் சிங்குக்கு குர்சரண் கவுர் என்ற மனைவி, 3 மகள்கள் உள்ளனர். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நட்டா,காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா, ராகுல், தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.

பிரதமரில் இரங்கல் பதிவு

மன்மோகன் சிங் மறைவு குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: "இந்தியா தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் மன்மோகன் சிங்கின் இழப்பிற்காக துக்கம் அனுசரிக்கிறது. எளிமையான சூழலில் இருந்து மேலே வந்து, மதிப்பிற்குரிய பொருளாதார நிபுணராக உயர்ந்தார். நிதியமைச்சர் உட்பட பல்வேறு அரசாங்க பதவிகளிலும் பணியாற்றினார்.

  பல ஆண்டுகளாக நமது பொருளாதாரக் கொள்கையில் வலுவான முத்திரையை பதித்தார். நாடாளுமன்றத்தில் அவரது தலையீடுகளும் அற்புதமானவையாக இருந்தன. நமது பிரதமராக, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த விரிவான முயற்சிகளை மேற்கொண்டார்.

   மன்மோகன் சிங் பிரதமராகவும், நான் குஜராத் முதல்வராகவும் இருந்தபோது நானும் அவரும், தொடர்ந்து உரையாடியிருக்கிறோம். அரசாங்கம் தொடர்பான பல்வேறு விஷயங்களில் நாங்கள் விரிவான விவாதங்களை நடத்துவோம். அவருடைய ஞானமும் பணிவும் எப்பொழுதும் வெளிப்படையானவை.

  துயரமான இந்த தருணத்தில், மன்மோகன் சிங் குடும்பத்தினர், அவரது நண்பர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்" இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

வியக்கவைக்கும் படிப்பாளி

  மன்மோகன் சிங் வெளிநாடுகளின் கல்வி நிலையங்களில் பல பட்டங்கள் பெற்றவர், இந்திய அரசின் பல உயரியப் பதவிகளையும் வகித்துள்ளார்.

  பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை முறையே 1952 மற்றும் 1954ல் பெற்றார்.

பிறகு அவர், 1957-ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதார டிரிபோஸ் பட்டம் பெற்றார். அடுத்து 1962-ல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பிரிவில் டி.பில் பட்டமும் பெற்றார். மன்மோகன்சிங் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகத் தனது பணியை துவக்கினார். பிறகு, உலகப்புகழ்பெற்ற கல்வி நிறுவனமான டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸிலும் பேராசிரியராகத் தொடர்ந்தார்.

   பேராசிரியர் மன்மோகனின் திறமையை கேள்விப்பட்ட அப்போதைய மத்திய அரசு மன்மோகனுக்கு 1971-ல், வர்த்தக அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகராக்கியது. தொடர்ந்து அவர், 1972-ல் மத்திய நிதி அமைச்சகத்தில் தலைமைப் பொருளாதார ஆலோசகராக பதவி உயர்வு பெற்றார். பின்னர் UNCTAD செயலகத்தில் பணியாற்றினார்.

அடுத்து அவருக்கு 1987-1990 வரை ஜெனீவாவில் தெற்கு ஆணையத்தின் பொதுச்செயலாளர் பதவியும் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர், மத்திய நிதி அமைச்சகத்தின் செயலாளர், திட்டக்குழுவின் துணைத் தலைவர், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர், பிரதமரின் ஆலோசகர் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் ஆகிய பதவிகளையும் வகித்தார்.

   இந்தியாவின் பொருளாதாரத்தை சர்வதேச அளவில் மேம்படுத்திய முன்னாள் பிரதமர் மன்மோகன், ஒரு நேர்மையான அரசியல்வாதி என்கிற பெயருக்கு பொருத்தமானவர்.