மாணவிகளை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்து வந்தவன் ரிமாண்ட்! மாவுகட்டு போட்ட போலீசார்!

மாணவிகளை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்து வந்தவன் ரிமாண்ட்! மாவுகட்டு போட்ட போலீசார்!

ம.பா.கெஜராஜ்,

 நூற்றுக்கணக்கான பெண்களை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்து வந்தவனை, ஒரு மாணவி அளித்த புகாரின் பேரில் கைது செய்திருக்கிறது தமிழக காவல் துறை.

 அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி அளித்த புகாரின் பேரில் திமுக வைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இது பற்றின விவரம் வருமாறு,

 சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர், திங்கள்கிழமையன்று 23.12.2024 இரவு உணவருந்திய பிறகு மாணவர் ஒருவருடன் பல்கலைக் கழக வளாகத்திற்குள் பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த அடையாளம் தெரியாத ஒருவர் தங்களை அச்சுறுத்தியதாகவும் பிறகு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகவும் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் அந்த மாணவி புகார் அளித்தார்

இதற்கு பிறகு, கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, குற்றவாளியைப் பிடிப்பதற்கு கோட்டூர்புரம் உதவி ஆணையர் தலைமையில் நான்கு தனிப் படைகள் அமைக்கப்பட்டன.

இது தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த 37 வயதான ஞானசேகரன் என்பவரை காவல்துறை கைது செய்துள்ளது.

இவர் நடைபாதையில் பிரியாணிக் கடை வைத்து வியாபாரம் செய்துவருவதாகவும், திமுகவில் மாணவர் அணியைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது.

 இந்நிலையில் அவர் குற்றம் தொடர்பாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பதாகவும் காவல்துறை தெரிவித்திருக்கிறது.

சென்னை நகரின் முக்கிய இடங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக் கழக வளாகத்திற்குள் இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் இது தொடர்பாக கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

  தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தலைநகரின் மையத்தில் அமைந்துள்ள தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக் கழகத்திலேயே மாணவிக்கு இப்படியொரு கொடூரம் நிகழ்ந்திருப்பது வெட்கக்கேடானது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்

 பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழகத்தையும் பிற மாநிலங்களையும் சேர்ந்த பெற்றோர்கள் அண்ணா பல்கலைக் கழகம் மிகவும் பாதுகாப்பானது என்ற நம்பிக்கையில் தான் தங்களின் குழந்தைகளை பல்கலைக் கழகத்திற்கு அனுப்புகிறார்கள்.

 ஆனால், பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு இல்லை, மாணவிகளே பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர் என்றால் இனி எந்தப் பெற்றோர் தங்களின் மகள்களை அண்ணா பல்கலைக் கழகத்திற்கு அனுப்புவார்கள். இது பெண் கல்விக்கு பெருந்தடையாக மாறிவிடாதா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

 பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தே.மு.தி.க. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோரும் இந்த நிகழ்வைக் கண்டித்துள்ளனர்.

 இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்திருக்கிறார். மேலும் தனிப்பட்ட மாணவி ஒருவருக்கு நேர்ந்த நிகழ்வுக்கு திமுக எப்படி பொறுப்பாகும் என்று அவர் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

 அண்ணா பல்கலைக் கழகத்தின் பதிவாளர் இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அந்த விளக்கத்தில், "இது தொடர்பாக அண்ணா பல்கலைக் கழக உள் புகா£ குழுவினருக்கும் தற்போது தகவல் தெரிவிக்கப்பட்டு, குழுவின் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு பணியாளர்கள் எப்போதும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

  இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க பல்கலைக்கழக அளவில் தேவையான கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும். அண்ணா பல்கலைக் கழகத்தைப் பொருத்தவரை அனைத்து மாணவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது" எனத் கூறிருக்கிறார்.

  இந்நிலையில்  பல்கலைக்கழக மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டுமெனக் கோரி, இந்திய மாணவர் சங்கத்தினர் அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தி விளம்பரம் தேடிக்கொண்டனர்.

  ஆனால் மாணவியின் புகாரை ஏற்ற காவல் துறையினர் துரித நடவடிக்கை எடுத்து குற்றவாளி ஞானசேகரனை கைது செய்திருப்பதுடன், அவனுக்கு மாவுகட்டு போட்டு புழல் சிறையில் அடைத்தனர்.

நடந்தது என்ன?

  அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு பொறியியல் பயிலும் மாணவி ஒருவர் அங்கு உள்ள விடுதியில் தங்கி உள்ளார். இவருக்கும், 3-ம் ஆண்டு மாணவர் ஒருவருக்கும் கடந்த சில மாதங்களாக நட்பு இருந்து வந்துள்ளது.கடந்த 23-ம் தேதி இரவு 8 மணி அளவில் இவர்கள் இருவரும் வழக்கம்போல பல்கலைக்கழக வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளனர். கட்டுமான பணி நடந்து வரும் இடத்தின் பின்னால் மறைவான இடத்தில் பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.

 அப்போது, இளைஞர் ஒருவர் மறைவான இடத்தில் இருந்து அவர்களை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அங்கு வந்த அவர், அந்த வீடியோவை காண்பித்து, சமூகவலைதளங்களில் பரப்பி விடுவதாக கூறி அவர்களை மிரட்டியுள்ளார். பின்னர், மாணவரை தாக்கி விரட்டியுள்ளார். பிறகு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, தப்பியுள்ளார்.

  இதுதொடர்பாக விடுதி அறையில் உள்ள தோழிகள் மற்றும் பெற்றோரிடம் மாணவி தெரிவித்துள்ளார். வெளியூரில் இருந்த பெற்றோர் உடனடியாக சென்னைக்கு விரைந்தனர். நடந்த சம்பவம் குறித்து கோட்டூர்புரம் காவல் உதவி ஆணையர் பாரதிராஜாவிடம் 24-ம் தேதி புகார் கொடுத்துள்ளனர்.

  இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அருணுக்கு தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின்பேரில், தென் சென்னை காவல் கூடுதல் ஆணையர் கண்ணன் நேரடி மேற்பார்வையில், மயிலாப்பூர் துணை ஆணையர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தீவிர புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக ஆர்.ஏ.புரம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி வழக்கு பதிவு செய்தார்.

  இதைத் தொடர்ந்து, பல்கலைக்கழக வளாகம் முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் தனிப்படை போலீஸார் துப்புதுலக்கினர். விடுதி மாணவர்கள், கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில், மாணவியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது சென்னை கோட்டூரை சேர்ந்த ஞானசேகரன் (37) என்பது தெரியவந்தது.

 இவன், இரவு நேரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் அடிக்கடி அத்துமீறி நுழைந்துள்ளார். மாணவ, மாணவிகளை மிரட்டி இதுபோல பலமுறை தவறான செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. மாமல்லபுரத்திலும் ஒரு வன்கொடுமை வழக்கில் சிக்கியுள்ளார். சிறையில் அடைக்கப்பட்டு, 2014-ல் வெளியே வந்துள்ளார். இவர் மீது 13 வழக்குகள் இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  தற்போது பாதிக்கப்பட்ட மாணவி துணிச்சலாக வெளியில் வந்து புகார் அளித்திருப்பதால் பலே ஆசாமி சிக்கியிருக்கிறார்.