ஆறு முறை சவுக்கால் அடித்துக் கொண்ட அண்ணாமலை! யாரைக் காப்பாற்ற திமுக அரசு முயற்சிக்கிறது என கேள்வி?

ஆறு முறை சவுக்கால் அடித்துக் கொண்ட அண்ணாமலை! யாரைக் காப்பாற்ற திமுக அரசு முயற்சிக்கிறது என கேள்வி?

ம.பா.கெஜராஜ்,

  பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை ஏற்கனவே சொன்னபடி இன்று காலை டிச-27 சென்னையில் தன்னைத்தானே சவுக்கால் அடித்துக் கொண்டார். கடந்த 23 ஆம் தேதி அண்ணாபல்கலை மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் இந்த செயல் மேலும் டென்ஷன் ஏற்றியிருக்கிறது.

  இந்நிலையில் இந்த பாலியல் விவகாரத்தில், சென்னை காவல் ஆணையர் அருண், உயர் கல்வித் துறை அமைச்சர் கோவை செழியன் ஆகியோர் மாறுபட்ட கருத்தை தெரிவித்து வருவது, வன்கொடுமை வழக்கு விசாரணையில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

  அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்ற நபரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மாணவி பாதிக்கப்பட்டது தொடர்பாக, பல்கலைக்கழகத்தில் இருந்து காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்யப்பட்டது," என்றார்.

ஆனால், உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், "பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் குழுவுக்கு எந்த புகாரும் முதலில் வரவில்லை. காவல்துறை மூலமாகவே, மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு தெரியவந்தது," என தெரிவித்துள்ளார்.

   மேலும் சென்னை காவல் ஆணையர், பல்கலைக்கழகத்தின் குழு மூலமாகவே காவல் துறைக்குப் புகார் வந்தது என்று கூறுகிறார். ஏன் இத்தனை முரண்பாடுகள்? உண்மையில் யாரைக் காப்பாற்ற திமுக அரசு முயற்சிக்கிறது? உண்மையில் என்ன நடந்தது? அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட மாணவி, குற்றவாளிக்கு தொலைப்பேசி அழைப்பு வந்ததாகத் தெரிவித்ததாகவும், சார் என்று கூறி, குற்றவாளி பேசியதாகவும் தெரிவித்ததாக முதலில் செய்திகள் வெளிவந்தன.

ஆனால், அதனை அப்படியே வெளிவராமல் மறைக்கும் முயற்சி நடப்பதாகத் தெரிகிறது. இந்தக் குற்றத்தில் தொடர்புடையவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் வரை தமிழக பாஜக இதனை விடப்போவதில்லை. பிரச்சினையை மடைமாற்றி, உண்மையை மறைத்துவிடலாம் என்ற நோக்கம் திமுக அரசுக்கு இருக்குமேயானால், திமுக அரசுக்கும் இந்தக் குற்றத்தில் தொடர்பு இருப்பதாகத் தான் கருத முடியும்," எனறு அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

    அப்படியிருக்க காவல் ஆணையர் அருணும், உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியனும் மாறுபட்ட கருத்தை தெரிவித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.

 முன்னதாக காலை பத்து மணியளவில் அண்ணாமலை வெறும் உடம்பில் சவுக்கால் தன்னைத்தானே ஆறு முறை அடித்துக் கொண்டார்.

 இந்நிலையில் சென்னை ஆணையர் பேட்டியில் குறிப்பிடுகையில், குற்றம் சாட்டப்பட்ட நபரின் செல்போன் பிளைட் மோடில் இருந்ததாக தெரித்திருக்கிறார்.

  மேலும் காவல் துறையின் ஆன்லைன் போர்ட்டலான சி.சி.டி.என்.எஸ்.ஸில் பதிவேற்றம் செய்யப்படும் போஸோ வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கைகள் தானாகவே பிளாக் ஆகிவிடும். அதை பதிவிறக்கம் செய்ய முடியாது.

  ஆனால் அதை அப்லோடு செய்வதற்கு இடைப்பட்ட நேரத்தில் யாரோ பதிவிறக்கம் செய்துவிட்டார்கள் என்று சொல்லி சமாளித்திருக்கிறார்.

  இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை ஆய்வு செய்ய உள்ளார்.

ஆக இப்போதைக்கு இந்த விவகாரம் முடியாது என்றே இவற்றையெல்லாம் பார்க்கையில் தெரிகிறது.