ஆர்.எ.ஸ்.எஸ். விருப்பத்துக்கு மாறாக மோடி செயல்படுவதாக குற்றச்சாட்டு! பிரதமராக முன்மொழியப்பட்ட மோடி!

நரேஷ் .என்.
நரேந்திர மோடி பிரதமராக முன்மொழியப்பட்டார். இன்று நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டது. ஆனாலும் கூட ஆர்.எஸ்.எஸ். சின் விருப்பத்துக்கு மாறாக மோடி செயல்படுவதாக சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவத் சாடியிருக்கிறார்.
18 வது மக்களவையில் பா.ஜ.க. கட்சி தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளிலும் பா.ஜ.க. மட்டுமே 300-க்கும் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.ரானால் கருத்துக்கணிப்பு முடிவுகளை முற்றிலும் பொய்யாக்கும் வகையில், பா.ஜ.க. கட்சி 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
இதன் காரணமாக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு பா.ஜ.க. மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க இருக்கிறது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் என்டிஏ கூட்டணியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக மோடியை தேர்வு செய்து, மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க கூட்டத்தில் முன்மொழியப்பட்டது. தொடர்ந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவராகவும் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் மைய அரங்கில் நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் அனைத்து தலைவர்களும், புதிதாக எம்பிக்களாக தேர்தெடுக்கப்பட்டவர்களும், தோல்வியைத்தழுவியர்களும் பங்கேற்றனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்ற தலைவர் மற்றும் மக்களவைத் தலைவராக நரேந்திர மோடியின் பெயரை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்மொழிந்தார். தொடர்ந்து மத்திய உள்த்துறை அமைச்சர் அமித் ஷா அதனை வழிமொழிந்தார். இதன்பின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மோடியை பிரதமராக தேர்வு செய்வதற்கு தங்கள் ஆதரவினை தெரிவித்தனர்.
சந்திரபாபு நாயுடு பேசுகையில், பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 10 ஆண்டுகளில் முன்னெடுப்புகளை செய்தது. நரேந்திர மோடிக்கு தொலைநோக்கு பார்வை உள்ளது. மேலும் அவர் தனது கொள்கைகளை கச்சிதமாக நேர்மையாக செயல்படுத்துகிறார். இன்று இந்தியாவுக்கு சரியான தலைவர் இருக்கிறார். அதுதான் நரேந்திர மோடி. இந்தியாவிற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.
கடந்த நான்கு தசாப்தங்களாக அரசியலில் இருக்கும் நான் எத்தனையோ தலைவர்களை பார்த்திருக்கிறேன். உலக அளவில் இந்தியாவை பெருமைப்படுத்தியதற்காக நரேந்திர மோடிக்கு எல்லாப் புகழும் செல்ல வேண்டும். நாட்டுக்காக அவர் செய்த மிகப்பெரிய சாதனை இது. அவரது தலைமையில், உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரத்தை எட்டியுள்ளோம்.
இப்போது, இந்த ஆட்சியில் அவர் இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றப் போகிறார் என்று நாங்கள் நம்புகிறோம். மோடி தலைமையில், உலகில் எங்கு சென்றாலும், அதிக தனிநபர் வருமானம் இந்தியர்களால் பெறப்படுகிறது. நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். அவரது தலைமையில், இந்தியர்கள் எதிர்காலத்தில் உலகத் தலைவர்களாக மாறப் போகிறார்கள்." என்றார்.
நிதிஷ் குமார் பேசுகையில், "பிஹாரில் நிலுவையில் உள்ள அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும். நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்திருப்பது மிகவும் நல்ல விஷயம், நாங்கள் அனைவரும் பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்படுவோம். ஞாயிற்றுக்கிழமை நீங்கள் பிரதமராகப் பதவியேற்கிறீர்கள். ஆனால் இன்றே நீங்கள் பிரதமராக பதவியேற்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.
இந்த தேர்தலில் சிலர் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஜெயித்திருக்கிறார்கள். அடுத்த முறை எல்லாரும் தோற்பார்கள். எனக்கு அதில் முழு நம்பிக்கை உள்ளது." என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து மக்களவை பாஜக தலைவராகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவராகவும் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மோடி பிரதமர் ஆவதை ஆர்.எஸ்.எஸ். விரும்பவில்லை.
இந்த நிலையில், நடைபெற்று முடிந்த தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மை பெறாததால் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவதை ஆர்.எஸ்.எஸ். விரும்பவில்லை என்று சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மேலும், மோடிக்கு மாற்றாக வேறொரு நபரை பிரதமர் பதவியில் அமர வைப்பது தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். இந்தியாவின் அடுத்த பிரதமராக மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் நிதின் கட்கரி ஆகியோரது பெயர்கள் அடிப்பட்டன. எனினும், இது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என் 2024 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் நரேந்திர மோடிக்கு எதிராகவே அமைந்துள்ளன. இதையடுத்து நரேந்திர மோடி தானாக முன்வந்து பிரதமர் பதவியில் இருந்து விலகியிருக்க வேண்டும். இதற்கு முற்றிலும் மாறாக அவர் மீண்டும் அரசமைக்க முயற்சித்து வருகிறார். இவ்வாறு செய்வது நீண்ட காலத்திற்கு நீடிக்காது.
"நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவதை ஆர்.எஸ்.எஸ். விரும்பாமல், வேறொரு நபரை பிரதமர் பதவியில் அமர வைக்கும் முயற்சிகளில் இறங்கியது. இருந்த போதிலும், நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவதில் கவனம் செலுத்தி வருகிறார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு கடந்த காலங்களில், மோடி-அமித் ஷா ஆகியோரால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் எந்த நேரமும், எதுவும் நடக்கலாம்," என்று தெரிவித்தார்.
தேர்தல் வெற்றிக்கு பிறகு ஒவ்வொரு கட்சியும் முதற்கட்டமாக தனது எம்.பி.க்களை அழைத்து ஆலோசனை நடத்துவதே வழக்கம். இந்த ஆலோசனை கூட்டத்தில் அந்த கட்சியின் நாடாளுமன்ற தலைவர் யார் என்பதும் தேர்வு செய்யப்படும். இதையடுத்து, மற்ற விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும். ஆனால், நரேந்திர மோடி தேர்தல் முடிவுகள் வெளியானதும் தேசிய ஜனநாயக கூட்டணியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
அதிலும் தேர்தலில் தோல்வியைத் தழுவியவர்களும் அதில் பங்கேற்றனர்.