9 ஆம் தேதி பதவியேற்கும் பாஜக கூட்டணி அரசுக்கு காத்திருக்கும் எக்கச்சக்க சவால்கள்!

ம.பா.கெஜராஜ்,
வரும் 9 ஆம் தேதி அன்று பதவியேற்கவிருக்கும் பாஜக கூட்டணி அரசுக்கு எக்கச்சக்க சவால்கள் காத்திருக்கின்றன.
நாட்டில் உள்ள 543 தொகுதிகளில் பாஜக 240 இடங்களை கைப்பற்றி உள்ளது. ஆட்சி அமைக்க 272 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்பதால், பாஜகவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை.
ஆனாலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 தொகுதிகளை கைப்பற்றி அறுதி பெரும்பான்மை பெற்றுள்ளது. பாஜகவின் 14 கூட்டணி கட்சிகளிடம் 53 எம்.பி.க்கள் உள்ளனர். குறிப்பாக, தெலுங்கு தேசத்திடம் 16, ஐக்கிய ஜனதா தளத்திடம் 12 எம்.பி.க்கள் உள்ளனர்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு கடிதங்களை கூட்டணி கட்சி தலைவர்கள் வழங்கினர்.
பின்னர்கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று நடைபெறுகிறது. பாஜக, தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உட்பட கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் எம்.பி.க்களும் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். கூட்டணி கட்சிகளின் மக்களவை குழு தலைவராக இக்கூட்டத்தில் பிரதமர் மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட உள்ளார்.
இதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்திக்கும் மோடி, ஆதரவு எம்.பி.க்கள் பட்டியலை அவரிடம் வழங்கி, ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்.
ஜூன் 9-ம் தேதி மாலை 6 மணிக்குகுடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் எளிய விழாவில் பாஜககூட்டணி அரசு பதவியேற்க உள்ளது.தொடர்ந்து 3-வது முறை பிரதமராகநரேந்திர மோடி பதவியேற்க உள்ளார். அவரோடு முக்கிய அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என்று தெரிகிறது. குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடு நடந்து வருகிறது.
மோடிக்கு பைடன், புதின், சுனக் வாழ்த்து: பிரதமராக தொடர்ந்து 3-வது முறையாக பதவியேற்க உள்ள மோடிக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோ, தென்கொரிய அதிபர் யுன் சுக் இயோல், ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது சையது அல் நஹ்யான், எகிப்து அதிபர் அப்தெல்ஃபத்தா அல் சிசி, சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பதவியேற்பு விழாவில் பங்கேற்க இலங்கை அதிபர் ரனில் விக்ரமசிங்க, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, நேபாள பிரதமர் பிரசண்டா, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத், பூடான் பிரதமர் தாஷோஷெரிங் டோப்கே ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் யார் யார்? - பாஜக மூத்த தலைவர்கள் நிதின் கட்கரி, பியூஷ் கோயல் உள்ளிட்டோருக்கு மீண்டும் முக்கிய இலாகாக்கள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. தேர்தலில் தோற்றபோதிலும் ஸ்மிருதி இரானி, ராஜீவ் சந்திரசேகருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தெரிகிறது. அமைச்சரவையில் 40 புதிய முகங்கள் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
பிரதான கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் 5 அமைச்சர் பதவிகள் மற்றும் மக்களவை தலைவர் பதவியை கோருவதாக கூறப்படுகிறது. ஐக்கிய ஜனதா தளம் 3, சிராக் பாஸ்வான் தரப்பு 2, ஜிதன்ராம் மாஞ்சி தரப்பு 2, சிவசேனா ஷிண்டேஅணி 2 அமைச்சர் பதவிகளை கோரி வருகின்றன. நிதித் துறை அல்லது அதில் இணை அமைச்சர் பதவியை தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய 2 கட்சிகளும் கேட்டு வருகின்றன.
புதிய அரசுக்கு காத்திருக்கும் சவால்கள்
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை பாஜக வலியுறுத்தி வருகிறது. இந்த திட்டத்துக்கு ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு அளிக்கிறது. ஆனால் தெலுங்குதேசம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எனவே ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வது கடினம்.
கடந்த 2021-ம் ஆண்டில் நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்ந்து காலதாமதம் செய்யப்பட்டு வருகிறது. வரும் 2027-ம்ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படலாம். இதன்பிறகு மக்கள் தொகையின் அடிப்படையில் மக்களவைத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட உள்ளன.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களில் மக்கள் தொகை முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் உத்தர பிரதேசம், பிஹார் உள்ளிட்ட பெரும்பாலான வட மாநிலங்களில் மக்கள் தொகை கணிசமாக அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால் வடமாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும்.
தென் மாநிலங்களுக்கு சில தொகுதிகள் மட்டுமே கூடுதலாக கிடைக்கும். இதன் காரணமாக நாடாளுமன்றத்தில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும்.
ஆந்திராவில் ஆட்சிப் பொறுப்பு ஏற்க இருக்கும் தெலுங்குதேசம், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மத்திய அரசுக்கு கடுமையாக அழுத்தம் கொடுக்கக்கூடும்.
பாஜக 3-வது முறை ஆட்சி அமைத்தால் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தெலுங்கு தேசமும் ஐக்கிய ஜனதா தளமும் பொது சிவில் சட்டத்துக்கு முட்டுக்கட்டையாக இருக்கக்கூடும். எனவே பாஜக தலைமை தனது பிரதான கொள்கைகளை தற்காலிகமாக ஒத்தி வைக்கக்கூடும்.
மத்திய அமைச்சரவையில் தெலுங்கு தேசமும் ஐக்கிய ஜனதா தளமும் முக்கிய இலாக்காக்களை கோரி வருகின்றன. இந்த விவகாரங்களில் பாஜக தலைமை சாமர்த்தியமாக செயல்படக்கூடும்.
பாதுகாப்பு, நிதித் துறை, உள்துறை, வெளியுறவுத் துறை உள்ளிட்ட முக்கிய இலாக்களை பாஜக தன்வசமே வைத்திருக்கும். ரயில்வே உள்ளிட்ட இலாகாக்கள் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்படலாம் என கருதப்படுகிறது.