ஓ.பி.எஸ். அதிமுகவில் சேர்த்துக் கொள்ளபடுவாரா?வதந்தி என்கிறார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

ஓ.பி.எஸ். அதிமுகவில் சேர்த்துக் கொள்ளபடுவாரா?வதந்தி என்கிறார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

  ம.பா.கெஜராஜ்,

 அதிமுக என்கிற ரயிலில் இருந்து கழற்றிவிடப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் என்கிற பெட்டியை மீண்டும் இணைத்துக்கொண்டு பயணிக்கப்போவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பலமாக மறுத்துள்ளார்.

   அதிமுக பொதுச்செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி ஒற்றை பதவியை உறுதி செய்யும் விதமாக ஓ.பன்னீர் செல்வத்தை சூப்பராக கழற்றிவிட்டார்.  இந்நிலையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ் சுயேச்சையாக போட்டியிட்டுள்ளார்.

  அப்படியிருக்க தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் ஓ.பி.எஸ். மீண்டும் அதிமுகவில் இணைவார் என்று சில செய்திகள் வெளியானது.  

இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம், ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் இணையப் போகிறாரா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

 அதற்கு உதயகுமார் பதிலளிக்கையில், "மக்களவைத் தேர்தல் முடிவு வெளியான பிறகு மீண்டும் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் சேர்க்கத் திட்டம் என தொடர்ந்து பத்திரிகைகள் வெளியிட்டு வருகின்றன. எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் பரபரப்புகளுக்காக இவ்வாறான செய்திகள் வெளியிட்டு வருகின்றன. 

  ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தனது பதவி பறிபோகிறது என்றவுடன் அதிமுகவின் பிரிவுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஓபிஎஸ்தான். சட்டமன்றத்திலும் அதிமுக அரசுக்கு எதிராக வாக்களித்தவர்.

   ஆனாலும் கட்சியில் மீண்டும் அவரை இணைத்து மிக உயர்ந்த பொதுச் செயலாளர் அந்தஸ்திலான ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆட்சியில் துணை முதல்வர் பொறுப்பும் வழங்கப்பட்டது. ஆனால், கட்சியில் முக்கிய முடிவுகள் எடுக்கும் தருணங்களில் மறுப்பு தெரிவிப்பார் அல்லது மவுனம் சாதிப்பார்.

 ஓபிஎஸ் நடவடிக்கைகளால் அதிமுக வளர்ச்சி அடையாமல் பின்னோக்கி சென்றது. பொதுக் குழு சமயத்தில் அதிமுக தலைமை அலுவலகத்தை சின்னா பின்னமாக்கியவர்.

 கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத் தேனியில் வெற்றி பெற்றது அதிமுகவின் வெற்றி தானே தவிர, அது ஓபிஎஸ் வெற்றி அல்ல. தற்போது தன்னை மூன்று முறை முதல்வராக்கிய அதிமுகவை எதிர்த்து, இரட்டை இலையை எதிர்த்து சுயேச்சையாக ராமநாதபுரத்தில் களமிறங்கியுள்ளார். இது எந்த வகையில் நியாயம்? இன்னும் எத்தனை பாவங்களை ஓபிஎஸ் கட்சிக்கு எதிராக செய்வாரோ என்பது ஆண்டவனுக்கு வெளிச்சம்.

  ஆகவே, மீண்டும் ஒரு விஷப் பரிட்சையை அதிமுக தொண்டர்கள் யாரும் விரும்பமாட்டார்கள். தொண்டர்கள் விருப்பத்தை எடப்பாடி பழனிசாமி செயல்படுத்துவார். ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் சேர்ப்பதாக வரும் செய்திகளில் அடிப்படை உண்மை இல்லை. அது அடிப்படை ஆதாரமற்றது" என்று சொன்னார்.