உளவுத்துறை எச்சரிக்கையை ஊதாசீனப்படுத்திய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு!

உளவுத்துறை எச்சரிக்கையை ஊதாசீனப்படுத்திய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு!

ம.பா.கெஜராஜ்,

 கூலிப்படையினர் மோதிக்கொள்ள உள்ளனர், எப்படியும் கொலை விழும் என்று காவல் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு உளவுத்துறை முன்கூட்டியே தகவல் சொன்னது. இருந்தும் கூட  சம்மந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் அந்த தகவலை ஊதாசீனப்படுத்தினார். அதன் விளைவு ஒரு ரவுடி வெட்டி கொல்லப்பட்டார்.

 சென்னை கொருக்குப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் ஆர்.யுவராஜ், இவருக்குத்தான் அந்த முன்னெச்சரிக்கை அளிக்கப்பட்டது.

 இந்நிலையில் கொலை குற்றத்தை தடுக்கத் தவறிய காரணத்துக்காக, காவல் ஆய்வாளர் யுவராஜை, காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் சஸ்பெண்டு செய்து உத்தரவு பிறப்பித்தார்.

  சென்னை தண்டையார்பேட்டை ரெட்டைக்குழி தெருவைச் சேர்ந்தவர் தினேஷ் என்ற ஸ்வீட் தினேஷ் (27). இவர் மீது கொலை, கொலை முயற்சி உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இவர் நேற்று முன்தினம் கொருக்குப்பேட்டையில் உள்ள மதுபான பார் ஒன்றில் மது அருந்திக் கொண்டிருந்தபோது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் ஸ்வீட் தினேஷை வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பியது.

  இதுகுறித்து கொருக்குப்பேட்டை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ரவுடி சந்தோஷ் என்பவரை தினேஷ் மற்றும் அவருடைய கூட்டாளிகள் வெட்டியுள்ளனர். இந்த முன் விரோதத்தில் தற்போது தினேஷ் கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

  ரவுடி ஸ்வீட் தினேஷ் கொலை தொடர்பாக கொருக்குப்பேட்டையை சேர்ந்த சந்தோஷ் (23), அவரது கூட்டாளிகள் கொடுங்கையூர் அருண்குமார் (19), தண்டையார்பேட்டை சிவகுமார் (23), லோகேஷ் (19) ஆகிய 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.

  வட சென்னை பகுதியில் உள்ள கொருக்குப்பேட்டையில், கொலை என்பது அன்றாடம் நடக்கும் சம்பவமாகிவிட்து. அதனாலேயோ என்னவோ இன்ஸ்பெக்டருக்கு கிடைத்த தகவலை ஊதாசீனப்படுத்தியிருக்கிறார்.