இரவு நேர கார் பந்தய போட்டி! முதன் முறையாக சென்னையில் இன்று தொடக்கம்!

ம.பா.கெஜராஜ்,
தெற்காசியாவிலேயே முதன்முறையாக இரவு நேர கார் பந்தய போட்டி இன்று மற்றும் நாளை சென்னை தீவுத்திடல் பகுதியில் நடைபெறவுள்ளது. இது குறித்து விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரது எக்ஸ் பக்கத்தில் தகவல் வெளியிட்டு, பந்தய இடத்தை அவர் பார்வையிடும் புகைப்படங்களையும் பகிர்ந்திருக்கிறார்.
இப்போட்டிக்காக தமிழ்நாடு அரசு மற்றும் மாண்பமை சென்னை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின்படி மேற்கொள்ளப்பட்டுள்ள. ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தோம். போக்குவரத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் ௹ பொதுமக்கள் அமர்ந்து பார்க்கின்ற கிராண்ட் ஸ்டேண்ட்ஸ் மாண்புமிகு அமைச்சர்கள் - நீதியரசர்கள் - அதிகாரிகளுக்கான கேலரிஸ், ரேஸ் டிரைவிங் கேலரிஸ் போன்ற வசதிகளைப் பார்வையிட்டு, அதிகாரிகளிடம் அது தொடர்பான விவரங்களைக் கேட்டறிந்தோம்.
மேலும், ஓமந்தூரார் அரசுப் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அருகே ஆம்புலன்ஸ் வந்து செல்வதற்கான வழிகள் - சிகிச்சையிலிருப்போர் & மருத்துவமனை செயல்பாட்டிற்கு இடையூறு ஏற்படாத வகையில் அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளையும் ஆய்வு செய்தோம்.
சென்னையில் நடைபெறுகிற இந்த ஃபார்முலா 4 போட்டியினைத் திட்டமிட்டபடி சிறப்பாகவும் - பாதுகாப்புடனும் - மக்கள் மகிழும் வண்ணமும் நடத்திட சென்னை மாநகராட்சி - காவல்துறை - உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள், அலுவலர்களை வலியுறுத்தினோம் என்று பதிவிட்டிருக்கிறார்.
போட்டியின் விவரம் வருமாறு,
3.5 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட சர்க்யூட் தீவுத்திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர்பாலம், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் அண்ணா சாலை ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ளது. இது தெற்கு ஆசியாவிலேயே மிக நீளமான ஸ்ட்ரீட் சர்க்யூட் ஆக கருதப்படுகிறது.
தீவுத்திடலில் தொடங்கி மீண்டும் அங்கேயே சென்றடையும் வகையில் பந்தயம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சாலை சர்க்யூட்டில் 19 வளைவுகள் அமைந்துள்ளது. இது பந்தய டிரைவர்களுக்கு பெரிய சவாலாக இருக்கக்கூடும்.
தெற்கு ஆசியாவில் முதல் முறையாக சென்னையில் இரவு நேர கார் பந்தயம் நடத்தப்படுவதால் இந்தப் போட்டி பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இந்நிலையில் பிற்பகல் 2.45 மணியில் இருந்து மாலை 5 மணி வரை பயிற்சி சுற்றுகள் நடைபெறுகின்றன. இதை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். தகுதிச் சுற்றுகள் இரவு 7.10 மணி முதல் 9 மணி வரை நடைபெறும்.
நாளை பிரதான கார் பந்தயங்கள் 2 போட்டிகளாக நடைபெறுகிறது. பார்முலா 4 கார் இந்தியன் சாம்பியன்ஷிப் பந்தயத்தின் முதல் போட்டி மாலை 5.05 மணிக்கு தொடங்கும். இது 25 நிமிடம் மற்றும் ஒரு ரவுண்டுகளைக் கொண்டது. இந்த பந்தயம் 5.35 மணிக்கு நிறைவடையும்.
பார்முலா 4 கார் இந்தியன் சாம்பியன் ஷிப் பந்தயத்தின் 2-வது போட்டி இரவு 9.05 மணிக்கு தொடங்கும். இதுவும் அதே நிமிடங்களை கொண்டது. இந்த பந்தயம் 9. 30 மணிக்கு நிறைவடையும்.
முன்னதாக இந்த போட்டிகளின் முதல் சுற்று கடந்த 24 மற்றும் 25-ம் தேதிகளில் சென்னையை அடுத்து இருங்காட்டு கோட்டையில் நடைபெற்றது. சென்னையில் நாளை நடைபெறும் பந்தயம் 2-வது சுற்று போட்டியாகும். 3-வது சுற்று போட்டி கோ வையில் செப்டம்பர் 13 முதல் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. 4-வது மற்றும் 5-வது சுற்றுகள் அக்டோபர், நவம்பர் மாதங்களில் கோவா, கொல்கத்தாவில் நடத்தப்படுகிறது.
அப்படியிருக்க, இந்தியன் ரேசிங் லீக் பந்தயத்தின் முதல் போட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.05 மணிக்கும், 2-வது போட்டி இரவு 10.05 மணிக்கும் தொடங்கும். இந்த 2 பந்தயங்களும் தலா 30 நிமிடங்களைக் கொண்டது.
இரவு 10.35 மணியுடன் போட்டிகள் முடிவடையும். இது தவிர ஜேகே டயர் ஜூனியர் தேசிய போட்டியும் நடத்தப்படுகிறது. பந்தயங்களுக்கு இடையில் பொழுதுபோக்கு கார் சாகச நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
இவற்றை கண்டு களிக்க பார்வையாளர்களுக்காக அண்ணா சாலை, சுவாமி சிவானந்தா சாலை, தீவுத் திடல் என 8 இடங்களில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு அணிக்கு 2 வீரர்கள் வீதம் 16 பேர் கலந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு அணியிலும் 2 கார்கள் பயன்படுத்தப்படும்.
இந்திய ரேசிங் லீக் பந்தயத்தில் 6 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒரு அணியில் 4 பேர் இடம் பெறுவார்கள். இதில் ஒவ்வொரு அணியிலும் தலா ஒரு வீராங்கனை இடம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 18 வீரர்கள், 6 வீராங்கனைகள் என மொத்தம் 24 பேர் கலந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு அணியும் 2 கார்கள் வீதம் 16 கார்களை பயன்படுத்தும்.
மேலும் வாகனங்கள் நிறுத்துவதற்காக, சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதான வளாகம், கலைவாணர் அரங்கம், சென்னை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.