ஏழை குத்து சண்டை வீரருக்கு தமிழக அரசு உதவவேண்டும்!

ஜி.கே.சேகரன்,
வறுமையிலும் சாதித்து வருகிறார் ஒரு இளைஞர். அவர், தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் வாணியம்பாடி இளைஞர் 3 ம் இடத்தை பிடித்து சர்வதேச போட்டியில் பங்கேற்க தகுதி பெற்று உள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி-பெரிய பேட்டை பகுதியை சேர்ந்தவர் முஹம்மத் ஃபஹாத். இவர் கடந்த 2019-20 ஆம் ஆண்டு தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் + 2 முடித்து, வறுமையின் காரணமாக கல்லூரி படிப்பு தொடர முடியாத சூழல் ஏற்பட்டது.
இதனால் அவர் குத்துச்சண்டை போட்டியில் ஆர்வம் காட்டி வந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ம் தேதி கர்நாடக மாநிலம், பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டியில் நடைபெற்ற பெங்களூர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்றமாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று 2 ம் இடத்தை பிடித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2023 ஜனவரி 28, 29,30 ஆகிய தேதிகளில் தேசிய அளவிலான குத்துசண்டை போட்டி உத்திரபிரதேச மாநிலம், லக்னோவில் நடைபெற்றது.
இதில் இந்தியா முழுவதிலிருந்து சுமார் 100 க்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.இதில் வாணியம்பாடியைச் சேர்ந்த முஹம்மத் ஃபஹாத் என்பவர் கலந்து கொண்டு 3ம் இடத்தை பிடித்து சர்வதேச போட்டியில் பங்கேற்ற தகுதி பெற்றுள்ளார்.
மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இந்த விளையாட்டு வீரரை ஊக்குவிக்கும் விதமாக தமிழக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறைக்கு பொறுப்பேற்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், மத்திய அரசின் விளையாட்டு துறையும் இவருக்கு தக்க உதவிகளை செய்து சர்வதேச போட்டியில் கலந்து கொள்ள உதவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.