ஏழாம் வகுப்பு மாணவனை அடித்து காயப்படுத்திய தலைமையாசிரியர்…. காவல் நிலையத்தில் புகார்!

ஏழாம் வகுப்பு மாணவனை அடித்து காயப்படுத்திய தலைமையாசிரியர்…. காவல் நிலையத்தில் புகார்!

ஜி.கே.சேகரன்,

ஏழாம் வகுப்பு மாணவனை கண்மூடித்தனமாக தாக்கிய தலைமை ஆசிரியர்…. மாணவன் மருத்துவமனையில் அனுமதி.

வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி அடுத்த ரங்காபுரம் பகுதியில் வசித்து வருபவர்கள் சுரேஷ் அவருடைய மனைவி உமா மகேஸ்வரி.

இவர்களுடைய மகன் ஸ்ரீ அக்ஷய்குமார். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் (டி.ஏவி.ஐடியல்) பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.

 நேற்று பள்ளிக்குச் சென்ற மாணவனை தலைமையாசிரியர் சீனிவாசன் என்பவர் கண்மூடித்தனமாக அடித்து முகத்திலும் குத்தியுள்ளார்.

 இதில் படுகாயம் அடைந்த மாணவனை வீட்டிற்கும்  அனுப்பாமல் மருத்துவமனையில் முதலுதவி கொடுக்காமல் பள்ளியிலேயே அமர வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வந்த மாணவன் முகத்தில் காயம் இருப்பதைக் கண்டு பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து பள்ளிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 அதில் தலைமை ஆசிரியர் தான் தாக்கியதாகவும் உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியதாகவும் தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மாணவனை அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

 மேலும் இது குறித்து சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.