மின் கம்பத்தில் ஏறிய தொண்டர்களுக்கு அன்பு கட்டளையிட்ட மோடி!

மின் கம்பத்தில் ஏறிய தொண்டர்களுக்கு அன்பு கட்டளையிட்ட மோடி!

வி.டி.வித்யாசாகர்,

  பிரதமர் மோடி கலந்துக்கொண்ட பொதுக்கூட்டம் ஆந்திராவில் பிரமாண்டமாக நடைபெற்றது. பிரஜாகலம் என்கிற பெயரில் தேசிய ஜனநாயக கூட்டணி இந்தக் கூட்டத்தை நடத்தியது., தெலுங்கு தேசம் கட்சி, பா.ஜ.க., ஜன சேனா கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

  இந்த பொதுக் கூட்டத்தில் ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் உரையாற்றினார். அப்போது, அவரது பேச்சை நிறுத்தும்படி மோடி சொன்னார். இதனால் பவன் கல்யாண் சற்று திகைத்தார்.

  பொதுக்கூட்டதை காணகூடியிருந்த கூட்டத்தில் சிலர் மின்கம்பங்களில் ஏறினர். அதைப் பார்த்த மோடி எழுந்து  மைக்கை பிடித்து தொண்டர்களிடம் பேசினார்.   அவர்களை மின் கம்பத்தில் இருந்து கீழே இறங்க வலியுறுத்தினார்.

"அங்கு மின் வயர்கள் உள்ளன. அங்கு என்ன செய்கின்றீர்கள்? உங்களது உயிர் எங்களுக்கு விலைமதிப்பற்றது. தயவு செய்து கீழே இறங்குங்கள், மீடியாக்கள் உங்களது படம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். உடனே கீழே வாருங்கள். அங்கிருக்கும் காவலர்கள், தயவு செய்து மக்களை பார்த்துக் கொள்ளுங்கள்.

அவர்களுக்கு ஏதேனும் ஆகிவிட்டால், எங்களுக்கு அது மிகுந்த வலியை ஏற்படுத்திவிடும்," என்று பிரதமர் மோடி தெரிவித்து அமர்ந்தார்.

   அதன் பின்னரே பவன் கல்யாண் பேசினார்.

  பின்னர் மோடி பேசுகையில், ஜூன் 4ம் தேதி வெளியாகும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் தேசிய முற்போக்கு கூட்டணி 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

    வளர்ச்சி அடைந்த ஆந்திராவை பார்க்க வேண்டும் என்றால் 400 இடங்களில் என்.டி.ஏ. கூட்டணி வெற்றி பெற வேண்டும். எனவே தேர்தலில் தேசிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும் விதமாக வாக்களிக்க வேண்டும். என்.டி.ஏ. கூட்டணியில் இணைந்துள்ள சந்திரபாபு, பவண்கல்யாண் இருவரும் ஆந்திர மாநில வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து டபுள் இன்ஜின் அரசு தேவை என்பதை உணர்ந்து இணைந்துள்ளனர்.

  இந்த 5 ஆண்டுகளில் ஆந்திர மாநில வளர்ச்சி முழுவதுமாக முடங்கியுள்ளது. ஆந்திர மாநில மக்கள் கவனிக்க வேண்டியது காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இரண்டும் வேறு அல்ல. இரண்டும் ஒரு உறையில் உள்ள கத்தி. மாநிலத்திலும், மத்தியிலும் ஒரே கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தால் வளர்ச்சி பெற்ற ஆந்திர மாநிலத்தை உருவாக்கலாம் என்று பேசினார்.