வாக்காளர்களுக்கு மது விநியோகத்தை தடுக்க வேண்டும்! வேலூர் கலெக்டர் அதிரடி பேச்சு!

ஜி.கே.சேகரன்,
வாக்காளர்களுக்கு பணம் பரிசு பொருட்கள் மதுபான விநியோகத்தினை தடுக்குமாறு ஆட்சியர் பேச்சு
வேலூர் மாவட்டத்தில் கண்காணிப்பு பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள பறக்கும் படை குழு மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்பு லெட்சுமி பேசுகையில், நடைபெறவிருக்கும் 2024 பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுதல் தொடர்பான புகார்களை கண்காணிக்க 15 பறக்கும் படைக்குழுக்கள் மற்றும் 15 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இக்குழுக்கள் 24 மணிநேரமும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும்.
இக்குழுவானது வட்டார வளர்ச்சிஅலுவலர் தலைமையில் 1 சிறப்பு காவல் ஆய்வாளர், 1 பெண் காவலர் மற்றும் காணொலி பதிவு செய்பவர் ஆகியோருடன் செயல்படும்.
இக்குழுவானது தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல் தொடர்பான புகார்கள், அச்சுறுத்தல், மிரட்டல், சமூக விரோத கூறுகளின் இயக்கம், மதுபானம், ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் நோக்கத்திற்காக பெரும் தொகை போன்ற புகார்களை கண்காணித்து தகுந்த முறையில் வீடியோ பதிவு செய்து ஆவணப்படுத்த வேண்டும்.
பறக்கும் படை குழுவினர் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு அரசியல் கட்சிகளால் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை சோதனையின்போது கைப்பற்றினால் இதுதொடர்பான விவரங்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் எவ்வித பாரபட்சமின்றி கண்காணிப்பு பணிகளில் சிறப்பான முறையில் ஈடுபட வேண்டும்.
ரொக்கம், மதுபானம் அல்லது வேறு ஏதேனும் வாக்காளர்களுக்கு வழங்க பொருட்கள் எடுத்துச் செல்லப்படுவதாக பறக்கும் படையினருக்கு புகார் வரும்பட்சத்தில் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று வாகனங்களை பரிசோதனை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட இடத்திற்கு பறக்கும் படைக் குழுவினரால் உடனடியாக செல்ல இயலவில்லை எனில் அந்தப் பகுதிக்குட்பட்ட நிலையான கண்காணிப்புக் குழுவிற்கோ அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ தகவல் தெரிவிக்க வேண்டும்.
நடைபெறவிருக்கும் 2024 பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிமுறைகளின் படி, உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் ரூ.50,000/- க்கு மேற்பட்ட ரொக்கம் மற்றும் ரூ.10,000/- க்கு மேற்பட்ட பரிசுப் பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அரசியல் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் வரும் வாகனங்களில் ரொக்கமாக ரூபாய் ஒரு லட்சத்திற்கு மேல் பணம் இருந்தால் அதற்கு தொடர்புடைய கட்சியின் பொருளாளரிடம் இருந்து ஒப்பளிக்கப்பட்ட சான்றிதழ் இருக்க வேண்டும்.
வீடியோ பதிவு செய்யும் பொழுது அதில் நாள், நேரம், இடம் மற்றும் குழுவின் எண் ஆகியவை தெளிவாக தெரியும்படி வீடியோ பதிவு செய்ய வேண்டும்.
மேலும் பணம் பொருட்கள் கொண்டு செல்பவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களை திரும்ப பெற உரிய ஆதாரங்களுடன் மேல்முறையீட்டு அலுவலரை அணுகி தீர்வு காணலாம் என்பது குறித்து தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் குழுவினர் சம்பந்தப்பட்ட நபருக்கு தெரியப்படுத்த வேண்டும்.
வாகனங்களை சோதனை செய்யும் பொழுது வாகனத்தில் உள்ளவர்களிடம் மிகவும் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் தேர்தல் நடத்தை விதிமீறல்கள், தேர்தல் நியாயமாக நடத்துவதற்கு அச்சுறுத்தலாக இருக்கும் பணம் பரிசுப் பொருட்கள் மது ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஆயுதங்கள், தேர்தல் செலவினங்கள் மற்றும் தேர்தல் கூட்டங்கள் ஆகிய நான்கு விவரங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்களின் கண்காணிப்பு பணி தேர்தலில் மிகவும் முக்கியமான பணி. குறிப்பாக தேர்தல் நடைபெறும் கடைசி 72 மணி நேரங்களில் இக்குழுவினர் விழிப்புடன் இருந்து பணியாற்றி, நியாயமான, சுதந்திரமான தேர்தல் நடைபெற தங்களுடைய பணிகளில் கவனமாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பேசினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.