காதலுக்காக கொலை! மகளையே பலியிட்ட பெற்றோர்!

காதலுக்காக கொலை! மகளையே பலியிட்ட பெற்றோர்!

டி.இ.முகமது,

 தன் மகள் காதலிப்பதை அறிந்த பெற்றோர் அவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

 கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே பாகலூர் பக்கமுள்ள பட்வாரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ஸ்பூர்த்தி பாகலூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் பிரகாஷ் காமாட்சி தம்பதியின் மகள் ஆவார். 

  மகள் காணவில்லை என்று அவளது பெற்றோர் பல இடங்களில் தேடியிருக்கிறனர். அது நாடகம் என்பதை அறியாத அக்கம் பக்கத்தார் அவர்களுக்கு உதவி செய்தனர்.

   இந்நிலையில் 15-ம் தேதி பட்டவாரப்பள்ளி பகுதியில் உள்ள  ஏரியில் சிறுமி சடலமாக மிதந்தார். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை மீட்டுபிரேதப் பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

  மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.

   அப்போது சிறுமி வீட்டின் அருகில் இருந்த சிசிடிவி கேமராவை யாரோ துண்டை போட்டு மூடியுள்ளனர். தொடர்ந்து நடந்த விசாரணையில் அந்த சிறுமியின் பெற்றோரே அவரை கொலை செய்தது தெரியவந்தது.       

காரணம் என்ன?

  ஸ்பூர்த்தியும், முத்தாலியை சேர்ந்த சிவா (25) என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இது மாணவியின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர்கள் மகளை கண்டித்துள்ளனர்.

   ஆனால் மாணவி காதலை கைவிட மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் மகளை தாக்கி, ஏரியில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு காணாமல் போனதாக நாடகமாடியது தெரிய வந்துள்ளது.

  கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சிறுமி அந்த வாலிபருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.  அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மாணவியை மீட்டு மீண்டும் குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர். அந்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

  இது போன்ற காரணத்தினாலேயே மகளை பெற்றோர் கொலை செய்திருக்கிறார்கள். இந்நிலையில் தந்தை பிரகாஷ், தாயார் காமாட்சி மற்றும் இவர்களுக்கு உடந்தையாகலுறவினர் மீனாட்சி ஆகிய மூவரை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.