ஜூன் 8 ஆம் தேதி மோடி மீண்டும் பிரதமர் பதவியேற்பதாக தகவல்!
நரேஷ்.என்,
தேர்தல் முடிவுகள் வெளியாகி எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பாண்மை கிடைக்கவில்லை. கூட்டணி கட்சிகள் டெல்லி நோக்கி பயணித்துள்ளார்கள்.
இந்தியா கூட்டணி சந்திரபாபு நாயுடுவை எதிர் நோக்கி ஆட்சி அமைக்கலாம் என்று திட்டம் வகுக்கிறது.
இந்நிலையில் 17-வது மக்களவையை கலைப்பதற்கான பரிந்துரை கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து அளித்த மோடி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
மக்களவையை கலைக்கும் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார். மேலும் புதிய அரசு அமையும் வரை மோடியை காபந்து பிரதமராக செயல்படுமாறு கேட்டுக்கொண்டார்.
அப்படியிருக்க மூன்றாவது முறையாக பிரதமராக மோடி வரும் சனிக்கிழமை பதவியேற்க உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்பிக்கள் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இதில் மக்களவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் மோடி.
அதற்கான கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் வழங்கிய பின், சனிக்கிழமை (ஜூன் 8) மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்பார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதற்கு வசதியாக இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுடன் முக்கிய ஆலோசனை நடைபெறவுள்ளது.
அப்படி இருக்க சந்திரபாபு நாயுடுதான் தற்போதைய கிங்மேக்கர் என்கிற நிலையில், "தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் அங்கம் வகிக்கிறேன். இன்று நடக்கும் என்டிஏ கூட்டணியின் கூட்டத்துக்கு செல்கிறேன்." என்று கூட்டணி குறித்து சந்திரபாபு நாயுடு திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.
இதன்மூலம் பாஜக கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது.