நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் பாஜகவை வீழ்தலாம்! விசிக மாநாட்டில் முதல்வர் பேச்சு!

ம.பா.கெஜராஜ்,
நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் பாஜகவை வீழ்தலாம் என்று விசிக மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கட்சியின் 'வெல்லும் ஜனநாயகம்' என்கிற தலைப்பிலான மாநாடு நேற்று திருச்சி சிறுகனூர் பகுதியில் பிரமாண்டமாக நடைபெற்றது. அக்கட்சியின் தலைவரும், எம்.பியுமான திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்பொழுது கட்சியின் வெள்ளிவிழாவை முன்னிட்டு 25 கிலோ வெள்ளிக்கட்டிகள், திருமாவளவன் 61 வயதை நிறைவு செய்ததையொட்டி 161 பவுன் பொற்காசுகளை, கட்சி நிதியாக முதல்வர் முன்னிலையில் விசிகவினர் வழங்கினர்.
இந்த மாநாட்டில் இந்தியா கூட்டணியின் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மாநாட்டில், தி.க தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் தேசியப் பொதுச் செயலாளர் டி.ராஜா, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, அன்பில் மகேஸ் பொய்யா மொழி, சிபிஐ எம்.எல்.(விடுதலை) பொதுச் செயலர் திபங்கர் பட்டாச்சார்யா, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத்தலைவர் காதர் மொய்தீன், ம.ம.க.தலைவர் ஜவாஹிருல்லா, தவாகதலைவர் தி.வேல்முருகன், எம்.பி.க்கள் ஆ.ராசா, திருநாவுக்கரசர் கலந்து கொண்டனர்.
வெல்லும் சனநாயகம்' மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 33 தீர்மானங்களை விவரம்: சனநாயகம் காக்க உயிரீந்த ஈகியருக்கு வீர வணக்கம்! நூற்றாண்டு காணும் ஆளுமைகளுக்கு வீர வணக்கம்! பாலஸ்தீன மக்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் ஆதரவு நல்குக! பெரும்பான்மைவாத அரசியலைப் புறக்கணிப்போம். மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுக! சென்னையை இந்தியாவின் இரண்டாவது தலைநகராக அறிவித்திடுக! சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்திடுக. ஒரேநாடு ஒரே தேர்தல் திட்டத்தை கைவிடுக. தேர்தல் ஆணையர் நியமன சட்டத்தை திரும்பப் பெறுக. ஒப்புகைச் சீட்டுகளின் அடிப்படையில் தேர்தல் நடத்திடுக விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையைக் கொண்டு வருக. தொகுதி மறுசீரமைப்பில் தென் மாநிலங்களின் பாதுகாப்பை உறுதி செய்க.
கஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து: தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை செயல்படுத்துக. உயர் நீதிமன்ற நீதிபதிகளை மாநில அரசுகளே நியமிக்க வேண்டும். வழக்காடு மொழியாக தமிழை அறிவித்திடுக. ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையை திரும்பப் பெறுக. ஆளுநர் பதவியை ஒழித்திடுவோம்.
ஆளுநரை பல்கலைக்கழக வேந்தராக நியமிப்பதை கைவிடுக. 16-வது நிதிக்குழுவில் நிதிப்பகிர்வு நீதியை நிலைநாட்டுக. மாநில அதிகாரங்களை அதிகரிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தில் ஒன்றிய அரசு தலையிடுவதை நிறுத்த வேண்டும். தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றிடுக. வேலை வாய்ப்பில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கிடுக. அமைச்சரவையிலும், மேலவையிலும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு இட ஒத்துக்கீடு வழங்கிடுக. ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு சட்டம் இயற்றுக.
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்க. கல்விக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்க. நீட் தேர்வை ரத்து செய்க, கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்த்திடுக. பழங்குடியினருக்கு சாதிச் சான்றிதழ் வழங்குக பழங்குடியினரைக் கொத்தடிமையில் ஈடுபடுத்துவதைத் தடுத்திடுக வகுப்புவாத வன்முறைத் தடுப்பு சட்டத்தை இயற்றுக ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த மாநாட்டில் கலந்துகொண்ட முதலமைச்சர் முகஸ்டாலின் பேசுகையில், "திருமாவளவனுக்கும், எங்களுக்கும் இருப்பது தேர்தல், அரசியல் உறவு அல்ல. கொள்கை உறவு. பெரியாரையும், அம்பேத்கரையும் எப்படி யாராலும் பிரிக்க முடியாதோ, அதேபோலத் தான் திமுகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும். சகோதரத்துவம், சமத்துவத்தை நிலைநாட்ட இந்த மாநாட்டை திருமாவளவன் நடத்தி உள்ளார்.
எனவே, அனைவரும் ஒற்றுமையாக இணைந்து பணியாற்றி, பாஜகவை வீழ்த்த வேண்டும். மாநாட்டில் கொண்டு வந்துள்ள 33 தீர்மானங்களையும், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நிறைவேற்ற முயற்சிப்போம்.
இந்தியாவை உண்மையான கூட்டாட்சி நாடாக மாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் நமக்குள்ளது. தமிழகத்தில் பாஜக பூஜ்ஜியம். எனவே, தமிழக பாஜகவைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. அகில இந்திய அளவில் பாஜகவை வீழ்த்துவதற்கான அடித்தளம்தான் `இண்டியா' கூட்டணி. பாஜக ஆட்சியை வீழ்த்துவதை இலக்காகக் கொண்ட அனைத்துக் கட்சிகளும் இணைந்துள்ளன.
ஒருவேளை மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால், இந்தியா என்ற கூட்டாட்சி அமைப்பு இருக்காது, ஜனநாயகம் இருக்காது, மாநிலங்களும் இருக்காது.
ஜம்மு-காஷ்மீர் நிலைதான் மற்ற மாநிலங்களுக்கும் ஏற்படும். மாநிலத்துக்கு மாநிலம் அரசியல் நிலைமை மாறுபடும். பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்ற ஒற்றை லட்சியம்தான் எல்லோருக்கும் இருக்க வேண்டும். எனவே, துரோகிகளை மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும். கூட்டணி அமைத்தார்கள், ஆட்சியைப் கைப்பற்றினார்கள் என்பதுதான் வரலாறாக இருக்க வேண்டும். வரும் தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்பட்டு, ஜனநாயகம் வெல்லும்" என இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.