புலியின் குகையை பூனைகளுக்கு பரிசளிக்கலாமா? சசிகலா பரபரப்பு கடிதம்! சலசலக்கும் அ.தி.மு.க.!

ம.பா.கெஜராஜ்,
கழக பொதுச்செயலாளர் அ.இ.அ.தி.மு.க. என்ற பெயரில் வி.கே.சசிகலா அவர்கள் நமது எம்.ஜி.ஆர் இதழில் கடிதம் எழுதியுள்ளார்.
அவர் இந்த கடிதத்தை அ.தி.மு.க. தொண்டர்களை மையப்படுத்தி எழுதி உள்ளார்.
அந்தக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,
‘நிறை அன்புடைய சகோதர.. சகோதரிகளே! கழகத்தின் பேரன்புத் தொண்டர்களே அனைவருக்கும் மகிழ் வணக்கம்’ “இன்றைய தொடக்கம் ஒரு இனிய தொடக்கமாகட்டும். நாளைய நாள் நமக்காகட்டும். நம் நற்பணிகளால் தமிழ்ச் சமூகம் மீள் உயிர் பெறட்டும், இதற்கான வெற்றி இலக்கு நோக்கி நாம் கழகத்தை இயக்குவோம்.
அண்ணா கண்ட வழியில்..., புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். கொண்ட கொள்கைகளைப் பின்பற்றி ஆளுமையால், ஆட்சி சிறப்பால் மக்கள் மனம் வென்ற நம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பயணித்த நீண்ட பாதையை நெஞ்சில் கொண்டு கழகம் காப்போம்.
கரம் கோர்ப்போம், பகை வெல்வோம்.
ஒற்றுமைப் பூக்களை ஒன்றாய்க் குவிப்போம் . தமிழ்ச் சமூகத்தின் ஏற்றம் ஒன்றே நம் எண்ணமென்று மக்களுக்கு உரைப்போம். புறப்படுங்கள் புலியின் குகையை பூனைகளுக்குப் பரிசளிக்கலாமா ? பொறுத்தல் தகுமா ? மக்கள் தந்த மாபெரும் வெற்றியால் அ.இ.அ.தி.மு.க. நாடாண்டதையும் அது ஆற்றிய நற்பணிகளையும் சரித்திரம் சொல்லும் . நமக்கான புரிதலில் நிலவிய சிக்கலால் எதிரிக்கு இடம்கொடுத்து விட்டோமே ... சிந்தியுங்கள் ! எத்தனை எத்தனை இன்னல்களைக் கடந்த புரட்சித்தலைவி அம்மா சென்ற வழியில் தடை யின்றி செல்ல உறுதி கொள்வோம் . நீங்கள் நினைப்பது புரிகிறது . தொண்டர்களே உங்கள் தூய நெஞ்சம் புரிகிறது.
கழகம் காக்கப்படும் . மக்கள் ஒற்றுமை உயிர்பெறும் . காலத்திற்காய் காத்திருப்பவன் ஏமாளி . காலத்தைக் கைப்பற்றுபவன் புத்திசாலி , அம்மாவின் பிள்ளைகளான நாம் புத்திசாலிகளன்றோ? கரம் கோர்ப்போம் .. அம்பாய்ப் பயணிப்போம்.
இலக்குகளைத் தொடுவோம். அயராது உழைக்க மனம் கொள்வோம், எதிர்காலத்தை நம் கழகத்தின் கையில் கொண்டுவர சூளுரைப்போம் .
அஞ்சாது உறுதியேற்போம், மக்களுக்காய் நாமிருப்போம், நமக்காக மக்கள் இருப்பார்கள், கழகத்தின் பாதையில் புரட்சித்தலைவர் காணாத சோதனையா ? புரட்சித்தலைவி, அம்மா காணாத இடர்ப்பாடா? அத்தனை தடைகளையும் உடைத்து அவர்கள் கழகம் காந்த காலத்தை நாமறிவோம்.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் , இது நாம் அறிந்தது தானே? வெல்வோம் சகோதரர்களே, நானிருக்கிறேன் என்பதைவிட நாமிருக்கிறோம் . ஆதிக்கம் ஒரு நாள் மக்களிடம் மண்டியிடும் . அம்மா பாதையில் மக்கள் மனம் வெல்வோம் . ஒன்றுபடுவோம் .. வென்று காட்டுவோம் .. தலைவர்புகழ் ஓங்கட்டும் .. தலைவி புகழ் நிலைக்கட்டும் .. பொன்விழா பிறக்கும் இந்த நாள் கழகத்தின் வரலாற்றில் புது நாளாகட்டும் .
தலைவரின் எத்தனை எத்தனை திட்டங்களால் சமூகம் எழுச்சி கண்டது ? தலைவியின் எத்தனை எத்தனை செயல்பாடுகள் மக்கள் வாழ்வை மாற்றிக்காட்டின ? தலைவர்கள் காட்டிய பாதையில் . தொய்வில்லாமல் மக்களுக்காகப் பயணிப்போம் சங்கமிப்போம்..சாதிப்போம் . கழகம் நஞ்சாவதை ஒரு நொடியும் பொறுக்காது ... தொடர்வோம்.
வெற்றிப்பயணத்தை தொண்டர்களின் துணையோடும் மக்களின் பேராதரவோடும் மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைப்போம் .
புரட்சித்தலைவர் நாமம் வாழ்க ... புரட்சித்தலைவி அம்மா நாமம் வாழ்க ... வாழ்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ... வளர்க தமிழகம் ... நன்றி வணக்கம் . என்றும் அம்மாவின் வழியில் வி.கே.சசிகலா என்று கையெழுத்த கடிதம் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.