ஐ.பி.எஸ். அதிகாரியின் வாகனத்தை லபக்கிய அதிகாரிகள் மீது எப்.ஐ.ஆர்!

ஜி.சாந்தகுமார்,
தேசிய போதை பொருள் கட்டுப்பாட்டுத் துறை மண்டல இயக்குனரின் சென்னை அவர்களின் இன்னோவா வாகனத்தை அனுமதியின்றி எடுத்துச் சென்று, விபத்தும் ஏற்படுத்திய விவகாரத்தில், கார் சாவி எடுத்து கொடுத்தவர் மற்றும் ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்தியவர் என்ற அடிப்படையில், இரு அதிகாரிகள் மீது திருட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது.
இது பற்றின விவரம் வருமாறு,
சென்னை, அயப்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியில் இந்திய அரசு போதை பொருள் கட்டுப்பாட்டுத் துறை சென்னை மண்டல அலுவலகம் உள்ளது. இந்த மண்டல அலுவலகம் இயக்குனர் அரவிந்தன் இ.கா.ப. அவர்களின் தலைமையில் செயல்பட்டு வருகிறது.
அப்படியிருக்க இங்கு நுண்ணறிவு அதிகாரியாக பணியாற்றி வரும் பாரத் யாதவ் என்பவர் நேற்றிரவு மதுபோதையில் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த தொலை தொடர்பு அதிகாரி சுபேந்திர சர்மா என்பவரிடம், இயக்குனர் அரவிந்தன் பயன்படுத்தும் கார் சாவியை கேட்டு பெற்றுள்ளார். இதையடுத்து காரை பூந்தமல்லிக்கு ஓட்டிச் சென்ற அவர், வழியில் விபத்து ஏற்படுத்தியிருக்கிறார்.
ஆகவே, வாகனத்தை இயக்கியவர், ஓட்டியவர் என இருவர் மீது உதவி இயக்குனர் வேணுகோபால் திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அவர் அளித்த புகாரின் கீழ்,“அனுமதியின்றி காரை எடுத்துச் சென்றதால், காரை திருடிச் சென்றுள்ளனர்” என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உயர் அதிகாரி ஒருவரின் அலுவலக வாகனத்தை அனுமதியின்றி எடுத்துச் சென்றது மட்டுமின்றி விபத்துக்குள்ளாகிய சம்பவத்தை அடுத்து இது தொடர்பாக அதிகாரிகள் இருவர் மீது திருட்டு வழக்கு பதியப்பட்டது சர்ச்சையாகியிருக்கிறது.