ஓ.பி.எஸ். என்னை விரைவில் சந்திப்பார் சசிகலா பரபரப்பு பேட்டி!

ஓ.பி.எஸ். என்னை விரைவில் சந்திப்பார் சசிகலா பரபரப்பு பேட்டி!

 ம.பா.கெஜராஜ்,

 'விரைவில் சசிகலாவை சந்தித்து பேசுவேன்' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஓ.பன்னீர் செல்வம் குறியிருக்கும் நிலையில்,  விரைவில் ஓ. பன்னீர்செல்வம் என்னை வந்து சந்திப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று சசிகலா பேட்டியளித்துள்ளார்.

 நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சசிகலா வந்தார். அப்போது நாகை மாவட்ட ஓ.பி.எஸ். அணி மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் சசிகலாவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

   பின்னர் சசிகலா நிருபர்களிடம் கூறியதாவது:- சட்டமன்றம் என்பது மக்கள் பிரச்சினைகளுக்காக பேசக்கூடிய இடம். அந்த இடத்தில் மக்கள் பிரச்சினைகளுக்காக எந்த தீர்மானம், எது வந்தாலும் அதை மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் தாராளமாக பேசலாம். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் சட்டமன்றத்தில் பேசுவதற்கு உரிமை உள்ளது.      தற்போதைய சூழ்நிலையில் அ.தி.மு.க. யார் கைக்கு சென்றால் நன்றாக இருக்கும் என்ற கேள்வியை அ.தி.மு.க. தொண்டர்களிடம் தான் கேட்க வேண்டும்.

 சட்டமன்றத்தில் அ.தி.மு.க. சார்பாக ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதாவை வரவேற்பதாக ஓ.பன்னீர்செல்வம் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டது கண்டனத்திற்குரியது.

 நான் இவ்வாறு கூறுவதால் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிப்பது என்று கூறமுடியாது. அதே வேளையில் சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி மோதல் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் தி.மு.க.விற்கு சாதகமான சூழ்நிலையாக அமையாது.

   அப்படி ஏற்படும் அளவிற்கு நான் விடமாட்டேன். ஓ. பன்னீர்செல்வம் என்னை வந்து சந்திப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. எங்களுடைய கட்சிக்காரர்கள் இடையே வித்தியாசம் ஒன்றும் நாங்கள் பார்ப்பது கிடையாது. கண்டிப்பாக எல்லோரும் ஒன்றிணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம்.

   தற்போது அ.தி.மு.க.வின் தோல்விக்கு பிரிந்து இருப்பது ஒன்று தான் முக்கியமான காரணம் ஆகும். அனைவரையும் ஒன்று சேர்ப்பதற்கு நான் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் அனைவரும் ஒன்று சேர்ந்து அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்றார்.

 

 குறிப்பு:- சென்னை தி.நகரில் உள்ள வீட்டில் சசிகலா வசித்து வருகிறார். இந்நிலையில் போயஸ் கார்டன் பகுதியில், மறைந்த ஜெயலலிதாவின் வீட்டுக்கு எதிரில் மூன்று மாடிகளுடன் கூடிய பெரிய வீட்டை, சசிகலா தரப்பினர் கட்டியுள்ளனர். விரைவில், போயஸ் கார்டன் வீட்டில் குடியேற திட்டமிட்டுள்ள சசிகலா, ஆதரவாளர்களை சந்தித்து பேச, அங்கு தனி கூட்ட அரங்கும் கட்டியுள்ளார்.

 முதல் தளத்தில் இளவரசி குடும்பத்தினரும், இரண்டாவது தளத்தில் சசிகலா கணவர் நடராஜனின் தம்பி ராமச்சந்திரன் குடும்பத்தினரும் குடியேற உள்ளனர்.

 தன் வீட்டின் முன் ஜெயலலிதா சிலை நிறுவ திட்டமிட்டுள்ள சசிகலா, ஆந்திராவில் உள்ள இரபல சிற்பியிடம் சிலை வடிவமைக்கும் பொறுப்பை ஒப்படைத்துள்ளார். குருபெயர்ச்சிக்கு பின், புதிய வீட்டில் சசிகலா குடியேறி, தீவிர அரசியல் பிரவேசம் செய்ய, அவர் திட்டமிட்டுள்ளதாக, ஆதரவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 லோக்சபா தேர்தலுக்குள் பிரிந்து கிடக்கிற அ.தி.மு.க.,வை ஒருங்கிணைத்து, பா.ஜ., தலைமையிலான கூட்டணியில் இடம்பெற சசிகலா விரும்புகிறார். இந்நிலையில் 'விரைவில் சசிகலாவை சந்தித்து பேசுவேன்' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளதால், அவரும், சசிகலாவும் சேர்ந்து செயல்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.