சிலம்பத்தில் பரிசு பெற்ற பேரனுக்கு மோதிரம் அணிவித்த பாட்டி!

கு.அசோக்,
சிலம்பம் ஃபெடரேஷன் சார்பில் நடைபெற்ற ஏஷியன் சிலம்பம் போட்டியில் 11 தங்கம் 9 வெள்ளி 2 வெண்கல பதக்கங்களை பெற்று வேலூர் திரும்பிய மாணவ மாணவிகளுக்கு காட்பாடி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற தனது பேரனுக்கு தங்க மோதிரம் மற்றும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த பாட்டி.
வேர்ல்ட் யூனியன் சிலம்பம் ஃபெடரேஷன் சார்பில் முதலாவது ஏசியன் சாம்பியன்ஷிப் சிலம்பம் போட்டி விஜயவாடாவில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் கடந்த 17,18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இதில் இந்தியா,இலங்கை,சிங்கப்பூர்,கனடா உள்ளிட்ட 8 நாடுகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இந்தியாவிலிருந்து பல்வேறு மாநிலங்கள் சேர்ந்த மாணவ மாணவிகள் சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டனர்,
அந்த வகையில் வேலூர் அடுத்த மேல்மொணாவூர் பகுதியில் உள்ள எம்.ஸ்டார் சிலம்பம் பயிற்சி பள்ளியை சேர்ந்த 16 மாணவ மாணவிகள் சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டு 11 தங்கப்பதக்கம் 9 வெள்ளி பதக்கம் இரண்டு வெண்கல பதக்கம் பெற்று தமிழகத்தில் முதல் அணியாக வெற்றி பெற்றனர்.
இதில் கார்த்திகா என்ற 14 வயது மாணவி மூன்று தங்கம் ஒரு வெள்ளி பதக்கம் பெற்றுள்ளார்.
பதக்கங்களைப் பெற்ற மாணவ மாணவிகள் நேற்று காட்பாடி ரயில் நிலையத்திற்கு வருகை தந்தனர். அப்போது மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டு வீரர்களும், பொதுமக்களும், சிலபம் போட்டி பயிற்சி அளித்த ஆசிரியர்களும் மாணவர்களின் உறவினர்களும் ரோஜா மலர்களை தூவி மாலை அணிவித்து பொன்னாடை போற்றி மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர்.
இதில் கார்திகேயன் என்ற மாணவனின் பாட்டி தனது பேரன் சிலம்பம் போட்டியில் தங்கம் வென்றதையடுத்து மாணவனுக்கு தங்க மோதிரம் அணிவித்து மகிழ்ச்சி பொங்க வரவேற்றார்.