இடுகாட்டுக்கு பாதை கொடு... இல்லை என்றால் வாக்களிக்க மாட்டோம்! கருப்புக்கொடி ஏற்றி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்!
கு.அசோக்,
பொன்னை அருகே சுடுகாட்டுக்கு பாதை கோரி நாடா ளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்றுவீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தினர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுக்கா, பொன்னை பாலேங்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட கோடவார்பள்ளி காலனி பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு அப்பகுதியில் உள்ள பாலாற்று ஓரம் சுடுகாடு உள்ளது.
ஆனால் இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்ய சுடுகாடு கொட்டகை மற்றும் ஈமச்சடங்கு மண்டபம் எதுவும் இல்லாத நிலை தொடர்ந்து வருகிறது.
இறந்தவர்களை சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல பாதை கிடையாது. ஆகவே அப்பகுதியில் உள்ள தனியார் நிலத்தின் வழியாக சென்று தான் உடல்களை அடக்கம் செய்ய வேண்டும் என்ற நிலை இருந்து வருகிறது.
இதனால் அப்பகுதி மக்களுக்கும் நில உரிமையாளர்களுக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது.

ஆகவே நில உரிமையாளர்களிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று கோரி வருகின்றனர்
அப்பகுதி மக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் அந்த கிராமத்தை சுற்றியுள்ள மற்ற கிராமங்களில் இருந்து இறந்த உடல்களை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல பாதை வசதி செய்து தரப்பட்டுள்ளது.
ஆனால் கோடவார்பள்ளி கிராம காலனி மக்களுக்கு இறந்த உடல்களை எடுத்துச் செல்ல பாதை வசதி செய்து தரப்படவில்லை.
சுடுகாடு கொட்டகை ஈமச்சடங்கு மண்டபம் என எதுவும் அமைக்காமல் அலட்சியம் காட்டி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என அந்த கிராமத்தில் உள்ள மக்கள் அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றி, எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

admin
