அமைச்சர் பெயரை சொல்லி ரூ.7 லட்சம் மோசடி!

அமைச்சர் பெயரை சொல்லி ரூ.7 லட்சம் மோசடி!

தாம்பரம்.முரளிதரன்,

   அமைச்சர் பெயரை சொல்லி ரூ.7 லட்சம் மோசடி! செய்த பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

  காஞ்சீபுரம் குள்ளப்பன் தெருவைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 28). இவர், பட்டப்படிப்பு படித்துவிட்டு வேலை இல்லாமல் இருந்து வந்தார். இவரிடம் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் புதுக்கோட்டையை சேர்ந்த லயோலா ரோஜர் சர்ச்சில்(41), வக்கீல் குமாஸ்தா புழல் புத்தகரம், சாரதி நகரைச் சேர்ந்த மகேஸ்வரி(42) ஆகிய 2 பேரும் தங்களுக்கு தமிழக அமைச்சர் ஒருவர் நெருக்கமாக உள்ளார் என்று பலரிடம் ஏமாற்றி வந்துள்ளார்கள்.

  இந்நிலையில் பிரேம் குமார் என்பவரிடம் கிராம நிர்வாக அலுவலர் வேலை வாங்கி தருகிறோம் என்று ஆசை வார்த்தை கூறினர்.  இதற்காக பிரேம்குமாரிடம் இருந்து ரூ.7 லட்சத்து 40 ஆயிரம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் சொன்னபடி அவருக்கு வேலை வாங்கி கொடுக்காமல் காலம் தாழ்த்தினர். இதனால் சந்தேகம் அடைந்த பிரேம்குமார், தான் கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி கேட்டார். ஆனால் பணத்தையும் கொடுக்காமல் இருவரும் ஏமாற்றி வந்தனர். இந்த மோசடி குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பிரேம்குமார் புகார் செய்தார். அதன்மீது விசாரிக்கும்படி புழல் போலீசாருக்கு உத்தரவிட்டது.

 அதன்பேரில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட மகேஸ்வரி மற்றும் லயோலா ரோஜர் சர்ச்சில் ஆகிய 2 பேரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

 இது குறித்து பிரேம் குமார் தெரிவிக்கையில் அமைச்சர் தெரியும் என்று அவர்கள் சொல்லி பில்டப் செய்தார்கள், அதை நம்பிதான் பணத்தை கொடுத்தேன், என்னை மாதிரி இன்னும் நிறைய பேர் அந்த குரூப்பிடம் பணம் கொடுத்திருக்கிறார்கள் என்றார்.