6 பேர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு! விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற அமைச்சர் எ.வ.வேலு!

ம.பா.கெஜராஜ்,
செய்யாறு பகுதியில் சிப்காட் அமைப்பதற்கு தொடர்ந்து சிலர் எதிர்ப்பு காட்டி வந்தனர். அவர்களிடம் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு 2 மடங்கு பணம் தரப்படும் என்று அரசு சொல்லியும் கேளாமல் பிரச்சனை செய்து வந்தனர். இந்நிலையில் அவர்கள் ஏழு பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. பின்னர் அவர்களின் உறவினர்கள் அமைச்சர் எ.வ.வேலுவை சந்தித்து, கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து விடுவிக்குமாறு கோரினர்.
இந்நிலையில், விவசாயிகள் 6 பேர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலையில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் பங்கேற்ற தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நிகழ்ச்சி முடிவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அந்த பேட்டியின் போது அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்ததாவது,
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, மேல்மா பகுதியில் சிப்காட் விரிவாக்கத்திற்கு மொத்தம் 1881 விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்த நடவடிக்கை எடுத்து வரப்படும் நிலையில், அவர்களில் 230 விவசாயிகள் மட்டுமே ஆட்சேபனை தெரிவித்ததாகவும், நிலம் கையகப்படுத்தும் விவசாயிகளுக்கு சந்தை வலையை விட 2 மடங்கு பணம் தரப்படுவதாகவும் அதைக் கொண்டு அவர்கள் பொருளாதாரத்தில் மேம்படுவதோடு வேறு இடத்தில் நிலத்தையும் வாங்கலாம் என்றும் தெரிவித்தார்.
குறிப்பாக ஒருங்கிணைந்த வடாற்காடு மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் பிரிக்கப்படும் போது அனைத்து தொழிற்சாலைகளும் வேலூர் மாவட்டத்தில் ஒதுக்கப்பட்டு வெறும் விவசாய மாவட்டமாக விவசாய நிலங்களை மட்டுமே கொண்ட மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டம் இருந்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு ஆணி தொழிற்சாலை கூட இல்லாத நிலை இருந்தது, சுற்று வட்டார பகுதிகளில் உள்ளவர்களுக்கே சிப்காட் தொழிற்சாலையில் வேலைக்கு அதிக முன்னுரிமை அளித்து வருவதாகவும், ஐந்து சதவீதற்கும் குறைவான விவசாய நிலங்களையே கையகப்படுத்தி இந்த சிப்காட் விரிவாக்கம் நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் குறிப்பிட்ட விவசாயிகளை கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அருள் என்பவர் தான் போராட்டத்துக்கு தூண்டிவிடுகிறார்.
அவரின் தூண்டுதலின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட ஏழு பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அது குறித்து அவர்களது உறவினர்கள் தன்னிடம் வந்து அந்த ஏழு பேரையும் விடுவிக்க வேண்டுகோள் விடுத்தனர்.அவர்களின் வேண்டுகோள் குறித்து முதல்வர் பார்வைக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பேட்டியின் போது சொன்னார்.
இந்த பேட்டியின் போது தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி உடன் இருந்தார்
குண்டர் தடுப்பு சட்டம் ரத்து
இந்நிலையில், விவசாயிகள் 6 பேர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதில் குண்டர் சட்டம் போடப்பட்ட அருள் என்பவரை தவிர, மீதமுள்ள 6 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வருங்காலங்களில் இது போன்று அரசு திட்டங்களைக் காரணமில்லாமல் எதிர்க்க மாட்டோம் என்றும், வெளியாட்களின் தூண்டுதலின்பேரில் இத்தகைய தவறை செய்துவிட்டோம் என்ற என்றும் கூறி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்று அவர்களின் குடும்பத்தினர் அமைச்சர் எ.வ.வேலுவிடம் கோரிக்கை முன்வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட விவசாயிகளான பச்சையப்பன், தேவன், சோழன், திருமால், மாசிலாமணி, பாக்யராஜ் ஆகியோர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.
அருள் என்பவர் தான் இந்த பிரச்சனையை தூண்டிவிட்டவர் என்பதால் அவர் குண்டர் தடுப்பு காவலில் உள்ளார்.