7 லட்சம் ஏக்கர் பஞ்சமி நில ஆவணங்கள் இல்லவே இல்லை! முன்னாள் ஐ.ஏ.எஸ். சிவகாமி பேச்சு!

7 லட்சம் ஏக்கர் பஞ்சமி நில ஆவணங்கள் இல்லவே இல்லை! முன்னாள் ஐ.ஏ.எஸ். சிவகாமி பேச்சு!

  த.நெல்சன்,

 வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு ஒன்றியத்திற்குட்பட்ட மிட்டாலப்பள்ளி, மாச்சம்பட்டு, பத்திலப்பள்ளி, அரவட்லா, பல்லகுப்பம் என ஒன்பது கிராமங்களில் 45 ஏக்கர் பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக வருவாய்த்துறையினர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

 இந்நிலையில் அந்நிலங்களை மீட்டெடுக்க வேண்டும் என்று பட்டியலின மக்கள் சார்பில் போராட்டங்களும், ஆர்பாட்டங்களும் நடந்து வருகின்றன.

 அப்படியிருக்க சமூக சமத்துவப்படை கட்சி சார்பில் நேற்று பேர்னாம்பட்டில் ஆர்பாட்டம் நடந்தது. அதில் நிறுவனத் தலைவர் சிவகாமி அவர்கள் கலந்துக் கொண்டு பேசினார்.

 அப்போது அவர் பேசியதாவது,

 பஞ்சமி நிலங்களை மீட்டுத்தரக்கோரி சமூக சமத்துவப்படை கட்சியின் சார்பில் வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஏராளமான மனுக்கள் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.

 கோவில் நிலங்களை மீட்க எடுக்கும் நடவடிக்கையில் ஒரு சதவீதம் கூட பஞ்சமி நிலங்களை மீட்க அரசு அக்கரை காட்டுவதில்லை.

    பஞ்சமி நிலங்கள் குறித்து பட்டியலின மக்கள் தெரிந்து கொள்வதில்லை. அரசும் இது குறித்த அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை.

 பஞ்சமி நிலம் மீட்பு ஆணையம் பெயரளவில் செயல்படுகிறது.1910 ம் ஆண்டு முதல் 1930ம் ஆண்டு வரை தமிழகத்தில் 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. தற்போது 3 லட்சம் ஏக்கர் நிலம் மட்டும் வைத்துள்ளனர். 2 லட்சம் ஏக்கர் நிலம் ஆக்கரமிப்பு செய்யப்பட்டுள்ளது. 7 லட்சம் பஞ்சமி நிலம் குறித்து ஆவணங்கள் இல்லவே இல்லை.

  வருவாய்த்துறையில் உள்ள இதற்காக ஆவணங்கள் பல கிழித்து எடுக்கப்பட்டிருக்கின்றன.

இதை எதிர்த்து நீதிமன்றத்திற்கு செல்ல பட்டியலின மக்களுக்கு வசதியிலலை.

 இது குறித்து தமிழக முதல்வர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

 பேரணாம்பட்டு நாலு கம்பம் அருகில் மாவட்ட செயலாளர் பொன்.குணசீலன் தலைமையில் நடந்த பஞ்சமி நில மீட்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில், ஆற்றல் க.சந்தோஷ் குமார் அவர்களும் கண்டன உரையாற்றினார்கள்.

 இந்நிகழ்விற்கு ஒன்றிய செயலாளர் முல்லை ஆஜி, நகர செயலாளர் சு.கார்த்தி, நகர துணை செயலாளர் க.வினோத்குமார், வி.ஏகதாஸ், பொன். சங்கர் கணேஷ் திருவண்ணமலை மாவட்டச் செயலாளர் சர்க்கரை, யாகாதேவ், சரத்குமார் கலந்து கொண்டனர்.

 மாவட்ட மகளிரணி தலைவர் சுமதி வி.நளினி மற்றும் சுமார் 350 பேருக்கு மேல் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள்  கலந்து கொண்டனர்.

 வி.கார்த்தி நன்றி உரை கூறினார்.