அய்யப்ப பக்தர்களுக்கு பிரியாணி குஸ்கா! சூப்பர் இன்ஸ்பெக்டரை காட்டிக் கொடுத்த சிக்கன் பீஸ்!
ஜி.கே.சேகரன்,
வங்கதேச இந்துக்கள் மீது நடைபெறும் தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த இந்து அமைப்புகள் சில முயன்றன. ஆனால் அனுமதி மறுக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இருந்தாலும் கூட தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதனால் அனைவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சீனிவாசன் என்பவர் மதிய உணவாக பாய்கடை பிரியாணியை வழங்கினார். இதனால் அந்த இடமே களேபரமானது.
வேலூர் மாவட்டம், வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் வங்கதேச இந்து உரிமை மீட்பு குழுவின் சார்பில் தடையை மீறி ஆர்பாட்டமானது ஒருங்கிணைப்பாளர் புவன் ராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதில் பாஜக மாநில பொறுப்பாளர் தசரதன், மாவட்ட செயலாளர் பாபு மற்றும் பெண்கள் உட்பட நூற்றுகணக்கானோர் ஒன்று திரண்டனர்.
அப்போது ஆர்பாட்டத்திற்கு தடை என கூறி போலீசார் கைது செய்ய முயன்ற போது பெரும் வாக்குவாதம் ஏற்பட்ட்டது.
இஸ்லாமிய இயக்க ஆர்பாட்டத்திற்கு எப்படி அனுமதி அளித்தீர்கள். எங்களுக்கு அனுமதியில்லை என்பது ஜனநாயகத்திற்கு எதிரானது, எங்களை தடுத்தால் நாங்கள் முஸ்லீம்கள் இருக்கும் இடத்திலும் மசூதி அருகேயும் போராடுவோம் என சவுண்டுவிட்டனர்.
இதனால் காவல்துறையினர் பின் வாங்கினர். இதனை அடுத்து வங்கதேச இந்துக்களை பாதுகாக்க கோரியும் வங்கதேச இந்து பெண்கள் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாவதை தடுக்க கோரியும் கையில் பதாகைகளுடன் கோஷங்களை எழுப்பினார்கள்.
நூற்றுக்கணக்கான காவல்துறையினர் அங்கு வந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்தனர்.
கைதானவர்கள் பலர் சபரிமலைக்கு விரதம் இருந்து மாலை போட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது அய்யப்ப பக்தர்களுக்கு சைவ உணவு என கூறி பிரியாணி குஸ்கா கொடுத்து போலீசார் மெத்தனமாக நடந்துக் கொண்டனர்.
மதிய உணவு அவர்களுக்கு பிற்பகல் 2.30 மணிக்கு வழங்கப்பட்டது அதில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்திருந்தவர்களுக்கு சிக்கன் குஸ்காவை சைவ குஸ்கா என கூறி வழங்கிவிட்டார்கள். அதனை சாப்பிட்ட அய்யப்ப பக்தர்கள் அதில் சிக்கன் பீஸ் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
காவல்துறை வேண்டுமென்றே அய்யப்ப பக்தர்களை கேவலப்படுத்தியதாகவும் தங்களுக்கு சிக்கன் குஸ்காவும், கறி லெக் பீஸ் வழங்கியதை கண்டித்தும் இந்த செயலலில் ஈடுபட்டுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருமண மண்டபம் வெளியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த காவல்துறை உயரதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பரபரப்பும் பதட்டமும் காணப்பட்ட நிலையில் அங்கு வந்த ஒரு காவல் அதிகாரி ஒரு பீஸ்தானே எடுத்து போட்டுவிட்டு சாப்பிடுங்கள் என்றதும் மேலும் அங்கு டென்ஷன் கூடியது.
பின்னர் அதிகாரிகள் பேசி உணவை மாற்றி தருவதாக கூறி வேறு உணவை மாற்றிதர நடவடிக்கை எடுத்தனர்.
அய்யப்ப பக்தர்களை கேவலப்படுத்திய காவல்துறையினரை கண்டித்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது பக்தியை கொச்சைப் படுத்தும் செயல் என்பதால் சம்மந்தப்பட்ட காவல் அதிகாரி மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளார்களாம்.
குஸ்காவில் பீஸ் மட்டும் இல்லை என்றால் கண்டுபிடித்து இருக்கவே முடியாது .
அப்படி என்றால் பிரியாணி குஸ்காவை அய்யப்ப பக்தர்களுக்கு தெரிந்தே வாங்கி கொடுத்திருக்கிறார்கள் என்பது வேதனை தான்.
இராணிப்பேட்டை மாவட்டம்.
வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடைபெறும் தாக்குதலை கண்டிக்கும் விதமாக ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் வங்கதேச இந்து உரிமை மீட்புக் குழு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் இந்து கோவில் மீதான தாக்குதலையும் கண்டித்தும் வங்கதேச அரசை கண்டித்து. கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்க பட்டதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி குண்டு கட்டாக கைது செய்தனர்.