எம் பி பதவியில் இருந்த போது கொலை செய்யப்பட்டவரின் மகன் பாஜக வேட்பாளர்! ஜி...க்கு பதில் தோழர் என்று அழைப்பதால் நாகை தொகுதியில் பரபரப்பு!

க.பாலகுரு,
நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக எஸ்.ஜி.எம்.ரமேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். யார் இந்த ரமேஷ் இவருடைய அரசியல் பின்புலம் என்ன என்பதை அறிந்து கொள்வோம்.
திருவாரூர் மாவட்டம் சித்தமல்லியை சேர்ந்த முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி, எஸ்.ஜி. முருகையன் - நாகம்மாள் தம்பதியினருக்கு 1968 ஆம் தேதி பிறந்தவர் எஸ்.ஜி.எம் ரமேஷ் (வயது 56) தற்பொழுது 2024 நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு சுப்ரியா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவருடைய பிரதான தொழில் சமையல் எரிவாயு உருளை விநியோகித்து தனது அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகிறார்.
இவரது தந்தை முன்னாள் எம்பி எஸ்.ஜி.முருகையன் மன்னார்குடி பகுதியில் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களின் முக்கிய தலைவராக இருந்தார். எம்.பியாக இருந்தபோதே படுகொலை செய்யப்பட்டார்.
பாரம்பரிய அரசியல் குடும்பத்தைச் சார்ந்தவர் எஸ்.ஜி.எம்.ரமேஷ் அ.தி.மு.கவில் திருவாரூர் எம்.ஜி.ஆர் இளைஞர் பேரவை துணைத் தலைவராக இருந்தவர்.
இவரது மைத்துனர்தான் தற்போது நாகப்பட்டினம் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பியாக இருக்கும் செல்வராஜ் , எஸ்.ஜி.எம் ரமேஷின் மாமனார் தி.மு.க விவசாய அணி செயலாளரும், தற்போதைய தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான ஏ.கே.எஸ்.விஜயன்.
இப்படி இவர்களது குடும்பமே பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பம்.
கடந்த 2022 ஆம் ஆண்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் எஸ் ஜி எம் ரமேஷ் பாஜகவில் இணைந்தார்.
இவருக்கு மாநில விவசாய அணி துணை தலைவர் பதவி வழங்கப்பட்டது. தற்போது வரை பணியை சிறப்பாக செய்து வருகிறார்.
இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு நாகை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.