ஒருதரம்...ரெண்டுதரம்..மூன்றுதரம்... ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம்!

ம.பா.கெஜராஜ்,

 ஊராட்சிமன்ற பதவிகளை ஏலம் விடக்கூடாது என்பது மாநில தேர்தல் ஆணையத்தின் எச்சரிக்கை.

  ஆனால் அதை மீறி ஊராட்சி மன்ற தலைவர் பதவி ரூ.13 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

இது பற்றின விவரம் வருமாறு,

  வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ம் தேதிகள் என இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

  இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது.

  வரும் 22-ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

  வேட்புமனு பரிசீலனை 23 ம் தேதி செய்யப்பட உள்ளது.

  இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளை ஏலம் விடக்கூடாது எனவும், மிறி ஏலம், விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

  இவ்வாறு ஏலம் விடுவது ஜனநாயகத்திற்கு எதிரானது மட்டு மல்ல, சட்ட விரோதமானது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

  இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகாவிற் குட்பட்ட பொண்ணங்குப்பம் ஊராட்சி ஒன்றியத்தில் பட்டியிலின உட்பிரிவு கொண்ட அருந்ததியருக்கு ஒதுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் பதவி 13 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

  இதையறிந்து துத்திப்பட்டு மதுரா பொண்ணங்குப்பம் பகுதி மக்கள் போராட்டத்தில் இறங்கினர்.

  பிரச்சனையை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க வந்த வட்டாட்சியரை முற்றுகையிட்ட மக்கள், தேர்தலை புறக்கணிக்கப்பதாக  தெரிவித்தனர்.

   அதிர்ந்த அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். இந்த விவகாரமங்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

   ஆகவே அங்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர். அதிக வாக்குகளைக் கொண்ட துத்திப்பட்டு கிராமத்தினர் ஒன்றிணைந்து  ஏலம் நடத்தி தலைவரை தேர்ந்தெடுப்பதால், குறைவான வாக்குகளைக் கொண்ட பொண்ணங்குப்பம் பஞ்சாயத்தை சார்ந்தவர்களுக்கு தலைவர் வாய்ப்பு இழக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

   அதுமட்டுமல்லாமல் வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேர் ஏலம் எடுத்ததாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

 பொண்ணங்குப்பம் பகுதி மக்களுக்கென தனி ஊராட்சி அந்தஸ்து - வேண்டும் என பலமுறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எவ்விதநடவடிக்கை எடுக்காததால் தொடர்ந்து 3 முறை இதே போல் ஏலம் விடப்படுவதாக அப்பகுதி  மக்கள் குற்றச்சாட்டினர்.

 மேலும், செஞ்சி வட்டாட்சியர் ராஜன் மற்றும் செஞ்சி வட்டார வளர்ச்சி அலுவலர் கேசவன் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் பிரயோஜனம் ஏற்படவில்லை.

 இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

 இதனிடையே, ஊராட்சி மன்ற தலைவர் பதவி 13 லட்சத்திற்கு ஏலம் போன விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் மோகன்,இ.ஆ.ப. அவர்கள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

ஆட்சியர் மோகன் பொண்ணங்குப்பம் ஊராட்சிக்கு நேரடியாக சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

 கூட்டத்தின் முடிவில் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு முடிவை கைவிடுவதாக தெரிவித்தனர்.

மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் காஞ்சனா , ஏ.டி.எஸ்.பி. , தேவராஜ் , தாசில்தார் ராஜன் , டி.எஸ்.பி. , இளங்கோவன், பி.டி.ஓ., க்கள் கேசவலு சுப்ரமணியன் மற்றும் பொன்னங்குப்பம் மக்கள் பங்கேற்ற்றனர்.

 பின்னர் இது குறித்து மாவட்ட ஆட்சியர் மோகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

 செஞ்சி தாலுகாவுக்கு உட்பட்ட பொண்ணங்குப்பம் ஊராட்சி ஒன்றியத்தில் ஆதிதிராவிடர் பிரிவு கொண்ட அருந்ததியருக்கு கொடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் பதவி 13 லட்சத்துக்கு விடப்பட்டதாக துத்திப்பட்டு மதுரா பொண் ணங்குப்பம் பகுதி மக்கள் புகார் தெரிவித்ததால் பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டேன்.

   ஊராட்சி மன்ற தேர்தலைப் பொறுத்தவரை பொதுமக்களுக்கு பரிசுப் பொருட்கள் கொடுக்கும் பட்சத்தில் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னதாகவே அறிவித்திருந்தேன்.

  மேலும் ஏலம் விடும் சம்பவத்தில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஏலம் விடப்பட்டது உறுதியாகும் பட்சத்தில் அவர்கள் மீது சட்டப் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் மோகன் சொன்னார்.

 மேலும் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும்வகையில் தனி ஊராட்சி உருவாக்கப்படும் ' என்றார்.

குறிப்பு:-ஊராட்சிமன்ற தலைவருக்கான பதவி விழுப்புரம் மாவட்டத்தில் ஏலம் விடப்பட்ட விவகாரம் தற்போது ஆட்சியரின் நடவடிக்கையின் அடிப்படையில் முடிவுக்கு வந்துள்ளது. ஆனாலும் இது போல மாநிலம் முழுவதில் பல மாவட்டங்களில்  ஏலம் விடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.