ராஜபாளையத்தில் போதை ஒழிப்பு பிரச்சாரம்!

கே.ஏ.ஜெகதீஸ்வரி,
ராஜபாளையம் உட்கோட்ட காவல்துறை சார்பில் போதை பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் 200க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி மாணவர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.
போதைப்பொருள் இல்லாத சர்வதேச சமூகத்தின் இலக்கை அடைய எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக, ஜூன் 26 ம் தேதி போதைப் பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தர்ம சர்வதேச தினமாக கடைபிடிக்கப் படுகிறது.
இந்த தினம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ராஜபாளையம் உட்கோட்டை காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தொடக்கத்தில் ரயில்வே பீடர் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் வைத்து போதை பொருள் தடுப்பு குறித்த உறுதி மொழியை மாணவர்கள் மற்றும் காவல் துறையினர் எடுத்துக் கொண்டனர்.
பின்னர் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை ராஜபாளையம் டிஎஸ்பி அழகேசன், மாவட்ட பாதுகாப்பு குழந்தைகள் அலுவலகம் சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதாகைகளை ஏந்தியவாறு பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்ட மாணவர்கள் பேரணி ரயில்வே பீடர் சாலை காந்தி சிலை தென்காசி சாலை காமராஜர் நகர் உள்ளிட்ட நகரின் மைய வீதிகள் வழியாக வந்து மீண்டும் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது.