"புரோக்கர்களின் பிடியில் அரசு அதிகாரிகள்! லாரிகள் ஓடாததால் நெல் மூட்டைகள் தேக்கம்!

க.பாலகுரு,
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பெறப்பட்ட நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு அரசு நிர்ணயத்த வாடகை முழுமையாக கிடைக்கவில்லை என லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
இதனால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலை ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட நெல் மூட்டைகளை, மற்ற மாவட்டங்களுக்கு அரவைக்காக அனுப்புவதற்கு, பேரளம் ரயில் நிலையத்திற்கு 200க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
இதற்காக லாரிகள் ஒப்பந்த அடிப்படையில் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் லாரிகளுக்கு அரசு நிர்ணயத்த வாடகையை லாரி உரிமையாளர்களுக்கு கடந்த மாதம் வரை நேரடியாக வழங்கி வந்தது.
தற்பொழுது மார்ச் 1-ஆம் தேதி முதல் இடைத்தரகர்கள் மூலமாக வாடகை வழங்கப்படுவதால் முழுமையாக வாடகை கிடைக்கவில்லை என லாரி உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதற்கு திருவாரூர் மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளரும் இடைத்தரகர்களுக்கு உடந்தையாக செயல் பட்டுவருதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆகவே,இதனை நம்பியுள்ள 300க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள், 200-க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள், 350-க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளிகள் தங்களது வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர்.
அரசு நிர்ணயித்த வாடகையை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரிடையாக வழங்க வேண்டும் என லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
குறிப்பாக, லாரிகளின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளதால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் உள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.