போலீசாரின் லிமிட் பிரச்சனையால் சாலையில் கிடந்த சடலம்! டாஸ்மாக்கை நொறுக்க தடியுடன்புறப்பட்ட பெண்களால் பரபரப்பு! டிஎஸ்பி மெத்தனம்!

போலீசாரின் லிமிட் பிரச்சனையால் சாலையில் கிடந்த சடலம்! டாஸ்மாக்கை நொறுக்க தடியுடன்புறப்பட்ட பெண்களால் பரபரப்பு! டிஎஸ்பி மெத்தனம்!

நூ.அ.பிலால்,
வாணியம்பாடி அருகே அரசு பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு. காவல் துறை எல்லை பிரச்சினை காரணமாக சடலத்தை அப்புறப்படுத்தாமல் 2 மணி நேரம் சாலையின் நடுவே விட்டதால் பொதுமக்கள் ஆத்திரம்.

அருகிலுள்ள டாஸ்மாக் கடை தான் விபத்து ஏற்படுத்த காரணம் என்று கூறி உறவினர்கள் டாஸ்மாக் கடையை
உடைத்து நொறுக்க கம்பு மற்றும் தடிகளுடன் கூட்டமாக திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி  அடுத்த முல்லைப் பகுதியை சார்ந்தவர் பிரபு. செங்கல் சூளை தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகி சத்யா என்ற மனைவியும் நான்கு மற்றும் ஏழு வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் பக்கத்து ஊரான குறும்பதெரு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு  தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது அவர்  டாஸ்மாக் அருகில் செல்லும் பொழுது அரசு பேருந்தை முந்திச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது  பேருந்து பக்கவாட்டில் உரசி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பேருந்து  சக்கரத்தில்  சிக்கிய பிரபு சம்பவ இடத்திலேயே பலியானார். உடனிருந்த இருவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் ஆலங்காயம் காவல் நிலையத்தால் சம்பவ இடம் எங்க லிமிட் இல்லை என்றும், அதேபோல்  வாணியம்பாடி கிராமிய நிலையத்தாரும் எங்கள் லிமிட் இல்லை என்றும் கூறி எவரும் அங்கு வரவில்லை.

மேற்படி இரண்டு காவல் நிலையத்தாரும் லிமிட்டை காரணம் காட்டி  சம்பவ இடத்திற்கு வராததால் சுமார் 2 மணி நேரமாக சடலம் நடு சாலையிலேயே இருந்தது.

இந்தப் பிரச்சினையைப் பற்றி அறிந்தும் டிஎஸ்பி விஜயகுமார் அதைப்பற்றி காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. 

இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்க கம்பு மற்றும் தடியுடன் ஆவேசமாக புறப்பட்டனர்.

வேறு வழியின்றி சுதாரித்துக் கொண்ட டி.எஸ். பி விஜயகுமார் டாஸ்மாக் கடையை மூட சொல்லி அறிவுறுத்தினார்.

மறுபக்கம் பிரபுவின் உறவினர்கள் கோபம் அடங்காமல் கூச்சல் இட்டுக் கொண்டிருந்தனர்.

சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சிய நேரில் வந்து உரிய முறையில் விசாரணை நடத்தி அந்தப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் உயிரிழந்த பிரபுவின் உறவினர்கள் கோரிக்கை விடுத்து  சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 விபத்து ஏற்படுத்தியதாக கூறப்படும் அரசு பேருந்தை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்த பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.

இதெல்லாம் சமாளித்த போலீசார்  சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து மூடப்பட்டு இருந்த டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டது.சம்பவம் குறித்து கிராமிய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நல்ல டிஎஸ்பி!!