டுபாக்கூர் டாக்குமென்ட்டுக்கு 10 லட்சம் லோன்! போலிஸ் தேடுவதால் மேனேஜர் எஸ்கேப்!

டுபாக்கூர் டாக்குமென்ட்டுக்கு 10 லட்சம் லோன்! போலிஸ் தேடுவதால் மேனேஜர் எஸ்கேப்!

  ஜி.கே.சேகரன்,

ஆம்பூர் தனியார் வங்கியில் போலி ஆவணங்களை காட்டி ரூ.10 லட்சம் கடன் வாங்கி மோசடி செய்யப்பட்ட வழக்கில் வங்கி மேலாளர்கள் உள்பட 5 பேரை கைது செய்து தலைமறைவாக உள்ள இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் புறவழிச்சாலையில் தனியார் எக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி செயல்பட்டு வருகிறது.  இந்த வங்கியில் ஆம்பூர் அருகே வெங்கிலி கிராமத்தை சேர்ந்த சரவணன் (44), இவரது மனைவி  மஞ்சுளா (40) ஆகிய இருவரும் கடந்த 2019 ஆம் ஆண்டு ரூ.10 லட்சம் கடன் வாங்கியுள்ளனர்.  

  வாங்கிய கடனை ஐந்து ஆண்டுகள் ஆகயும் இதுவரை திருப்பி செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக வங்கியின் தணிக்கைத்துறை அதிகாரி கார்த்திகேயன் ஆய்வு நடத்தினார். 

  ஆய்வில் கடன் வாங்க வங்கியில் கொடுத்த ஆவணங்கள் அனைத்தும் போலியானது என்பது தெரியவந்தது.  அதன்பேரில் போலியான பத்திரத்தை காட்டி கடன் வாங்கியவர்கள், போலி பத்திரத்தை வைத்துக் கொண்டு கடன் வழங்கிய வங்கி மேலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வங்கியின் தணிக்கைத் துறை அலுவலர் கார்த்திகேயன் ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

  புகாரின் பேரில் ஆம்பூர் கிராமிய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, சொத்து பத்திரத்தை காட்டி கடன் வாங்கிய சரவணன், அவரது மனைவி மஞ்சுளா, பிணையக் கையெழுத்து போட்ட வெங்கிலியை சேர்ந்த விநாயகமூர்த்தி (57) மற்றும் வங்கியின் கடன் மேலாளர் வெங்கிலியை சேர்ந்த ராஜி (35), வங்கியின் மேலாளர் மஞ்சுநாதன் (43) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.   

மேலும் தலைமறைவாக உள்ள வங்கி  பணியாளர்கள் கார்த்திக், மதன்குமார் ஆகிய இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.