.கோவையில் தொழிலே போச்சு! அதிமுக வேட்பாளர் வேதனை! ஜி.எஸ்.டியால் விணை....வாங்கும் போது 18% விற்கும் போது 5% தான் கிடைக்கிறது!

ம.பா.கெஜராஜ்,
கோவை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சிங்கை ஜி.ராமச்சந்திரன், ஜி.எஸ்.டி வரியால் கோவையில் தொழில் எப்படி பாதிக்கிறது என்றும், இந்த தொகுதியில் பாஜக எங்களுக்கு போட்டியில் இல்லை என்றும் பேசி பிரச்சாரம் செய்து வருகிறார். இடையிடையே இந்தி மொழியிலும் வாக்கு சேகரிக்கிறார்.
அதிமுகவின் கோட்டையாக விளங்கும் கொங்கு மண்டலம் கோவையில் பாஜக சார்பில் அண்ணாமலை களமிறக்கப்பட்டதும், அதிமுக தலைமை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை அழைத்து கோவை தொகுதிக்கு சரியான நபரை போட்டியிட வைத்து அண்ணாமலையை தோற்கடிக்க வேண்டும் என்கிற அசைன்மென்ட் கொடுக்கப்பட்டது.
ஆகவே வேலுமணியின் குட்புக்கில் இருக்கும் சிங்கை ஜி.ராமச்சந்திரனின் பெயரை பரிந்துரை செய்தார். பாரம்பரிய அதிமுக, சிங்காநல்லூர் முன்னாள் எம்.எல்.ஏ.,வின் மகன், நன்கு படித்தவர், ஜெயலலிதாவால் அங்கீகரிக்கப்பட்டவர், சோஷியல் மீடியா களப் பணியில் தேர்ந்த அனுபவம் எனப் பல்வேறு விஷயங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
கோவை தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் சிங்கை ஜி ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்கள் எங்கு சென்றாலும் இரட்டை இலை, இரட்டை இலை என்று உற்சாகத்துடன் ஆதரவை வாரி வழங்கி வருகின்றனர். எனவே உறுதியான வெற்றி. 100 சதவீத வெற்றி. கடந்த முறை கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்ட நிலையில், இம்முறை திமுகவே நேரடியாக இறங்கியுள்ளது. ஆனாலும் அவர்கள் தோல்வியை தான் சந்திப்பார்கள்.
கடந்த 3 ஆண்டுகளாக திமுக மேல் இருக்கும் அதிருப்தி. பால் விலை, தண்ணீர் வரி, வீட்டு வரி, மின் கட்டணம் உள்ளிட்டவை உயர்ந்துவிட்டன. அதேபோல் மத்திய அரசு மீது கடும் அதிருப்தி காணப்படுகிறது. சிலிண்டர் விலை உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு என மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அதுமட்டுமில்ல, மக்களிடம் போய் கேட்டு பாருங்கள். மோடி பிரதமரானால் ஆகட்டும். அதனால் 10 காசுக்கு பிரயோஜம் இருக்கா?
கொரோனா காலத்தில் கஷ்டப்படும் போது வீடு வீடாக சென்று மளிகை பொருட்களை அளித்தது யார்? அதிமுகவை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் தான். கோவையை பொறுத்தவரை மில் தொழில், பம்ப், மோட்டார், ஃபவுண்டரிஸ், விசைத்தறி, கைத்தறி, சாயப்பட்டறை, பனியன் தொழில், கிரைண்டர் உள்ளிட்டவை பிரதான தொழில். இவற்றை தயாரிக்க தேவைப்படும் மூலப் பொருட்கள் ஒவ்வொன்றுக்கும் ஜி.எஸ்.டி வரி இருக்கிறது.
வாங்கும் போது 18 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுகிறது. விற்கும் போது வெறும் 5 சதவீத ஜி.எஸ்.டி வரி தான் கிடைக்கிறது. எனவே 13 சதவீதத்தை சமாளிக்க முடியவில்லை என்கின்றனர். அண்ணாமலைக்கு எதுவும் தெரியவில்லை. பிரச்சாரத்தின் போது புதுசு புதுசா எதை, எதையோ பேசிக் கொண்டிருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளாக மோடி அரசு என்ன செய்தது? இங்கு தொழில்துறையினர் செத்து கொண்டிருக்கிறார்கள்.
எனவே அதிமுக மகத்தான வெற்றி பெறும். நாடாளுமன்றத்தில் கோவை தொகுதி மக்களின் கோரிக்கைகளை எழுப்பி உரிய வசதிகளை செய்து தருவேன். என் மொபைல் நம்பருக்கு மக்கள் எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம். விரைவாக வந்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பேன் என்று சொல்லிய சிங்கை ஜி.ராமச்சந்திரன் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்டு தமிழிலும், இந்தியிலும் கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கனஜோராக பிரச்சாரம் செய்து வருகிறார்.