காடுகளே இல்லாத மயிலாடுதுறைக்கு சிறுத்தை வந்தது எப்படி? குழப்பமோ... குழப்பம்!

க.பாலகுரு,
சுற்றிலும் காடுகளே இல்லாத மயிலாடுதுறைக்கு சிறுத்தை வந்தது எப்படி? மக்களைப் போலவே அதிகாரிகளும் குழப்பம்.
மயிலாடுதுறையில் கூண்டில் சிக்காத சிறுத்தையை ஆறாவது நாளாக தேடும் பணி தீவிரம், மாப்படுகை பகுதிகளில் சிறுத்தை உலாவியதாக வந்த தகவலால் பரபரப்பு. தடயங்கள் எதுவும் இல்லாததால் வனத்துறையினர் திரும்பி சென்றனர்:- j
மயிலாடுதுறையில் ஆறாவது நாளாக வனத்துறையினர் தீவிரமாக சிறுத்தையை தேடி வருகின்றனர். சிறுத்தை உலாவிய மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரத்தில் ஏற்கனவே மூன்று கூண்டுகள் வைக்கப்பட்டது.
பின்னர் பொதுமக்கள் தகவலின் பெயரில் மயிலாடுதுறை ரயில் நிலையம் பகுதி, கோவங்குடி, அசிக்காடு, மறையூர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது வரை மொத்தமாக ஏழு இடங்களில் சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாப்படுகை ரயில்நிலையம், ஆற்றங்கரை பகுதியில் சிறுத்தை உலவியதாக வந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து வனத்துறையினர் தீவிர சோதனைகளில் ஈடுபட்டனர். ஆனால் தடயங்கள் எதுவும் சிக்காததால் திரும்பி சென்றனர்.
சிறுத்தையை பார்த்ததாக பலர் தகவல் அளிப்பதாலும், வதந்தியை பரப்புவதாலும் சிறுத்தை எந்த பகுதியில் உலவுகிறது என்று கண்டறிய முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் நாகநாதன் ஐ எப் எஸ் அறிவுறுத்தலின் பேரில் வனத்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் கிட்டத்தட்ட சிறுத்தையை நெருங்கி விட்டதாக அதிகாரிகள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
அதில், காவிரி, பழைய காவிரி, மஞ்சலாறு நீர்வழி புதர்களில் சிறுத்தை பதுங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் சிறுத்தையை மையப்படுத்தி பொதுமக்கள் மத்தியில் பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
அதில் மயிலாடுதுறையில் ஒருபுறம் கடலும், மறுபுறம் கொள்ளிடம் ஆறும் உள்ளது. அப்படி இருக்க காடுகளே இங்கு இல்லாத நிலையில் சிறுத்தை எங்கிருந்து வந்தது எனவும், கர்நாடகாவில் இருந்து வந்த ரயில் மூலம் சிறுத்தை பதுங்கி வந்திருக்க கூடும் என்றும் கூறி மக்கள் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள்.