பொதுமக்களை வாட்டி வதைத்த பாதுகாப்பு அதிகாரிகள்! காலி இருக்கைகளை கண்டு விரக்தியான மத்திய அமைச்சர்!

பொதுமக்களை வாட்டி வதைத்த பாதுகாப்பு அதிகாரிகள்! காலி இருக்கைகளை கண்டு விரக்தியான மத்திய அமைச்சர்!

க.பாலகுரு,

 நேற்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழகத்துக்கு வந்திருந்தார். அவரது வருகையை முன்னிட்டு, போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அப்போது பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி பொதுமக்களை அதிகாரிகள் படாதபாடு படுத்திவிட்டனர். இதனால் கைக்குழந்தையுடஸ்ன் வந்த தாய்மார்கள், முதியவர்கள் கடும் அவதிக்கு ஆளாக்கப்பட்டனர்.

 நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம்.ரமேஷ்கோவிந்த்தை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார்.

 அதற்காக நேற்று காலை 9:30 மணி முதல் தெற்கு வீதி பகுதியில் காவல்துறையினர் சாலையில் தடுப்புகளை அமைத்து வாகனங்களில் உள்ளே அனுமதிக்க மறுத்து கெடுபிடி செய்தனர்.

 பிரச்சாரம் நடைபெறும் தெற்கு வீதியை பொறுத்தவரை இங்கு குழந்தை நல மருத்துவமனை உள்ளிட்ட 10 மருத்துவமனைகள், 4 வங்கிகள்  ஏராளமான கடைகள் வணிக நிறுவனங்கள் இருக்கின்றன.

 அப்படியிருக்க மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், முதியோர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், கைக்குழந்தைகள் உள்ளிட்டோரின் வாகனங்களை அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியதால், அவர்கள் கடும் வெயிலில் நடந்து சென்று மருத்துவமணைக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். 

 தெற்கு வீதியின் ஒரு எல்லையான நகராட்சி அருகே போடப்பட்டுள்ள பந்தலில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்ற நிலையில் அரை கிலோமீட்டர் அப்பால் உள்ள தெற்கு வீதியில் மறுமுனையில் சாலை தடுப்புகளை அமைத்து மருத்துவமனைக்கு வரும் பொது மக்களை தடுத்து நிறுத்தி மெட்டல் டிடெக்டர் சோதனை கருவிகள் மூலம் சோதனை செய்து தொல்லை கொடுத்தனர்.

  குறிப்பாக உடல்நிலை சரியில்லாத நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் மற்றும் அவரது  உறவினர்களிடம் மெட்டல் டிடெக்டர் கருவிக்கொண்டு சோதனை செய்து அவர்கள் கொண்டு வரும் பை உள்ளே என்ன இருக்கிறது என ஒவ்வொன்றாக ஆராய்ந்து அதன் பிறகு உள்ளே அனுப்பினர்.

 இதனால் பொதுமக்கள் நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இது குறித்து காவல்துறை தரப்பினர் கேட்டபோது எங்கள் மேல் அதிகாரிகள் கூறியபடி தான் நாங்கள் செய்ய முடியும் என்றனர்.

 ஆனால்¢ பிரச்சாரத்திற்கு மத்திய அமைச்சர் வருகிறார் என்பதற்காக நாங்கள் ஏன் அவதிப்பட வேண்டும் எங்களை ஏன் சிரமப்படுத்துகிறீர்கள்? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

 இவ்வளவு கெடுபிகள் நடந்ததே ராஜ்நாத்சிங்கின் பேச்சை கேட்பதற்கு போடப்பட்ட நாற்காலிகள் காலியாகவே இருந்தன. அதே போல் தென்காசி தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் ஜான் பாண்டியனுடன் ஜீப்பில் ஏறி மினி ரோடு ஷோ ஒன்றையும் நடத்திவிட்டு சென்றார் ராஜ்நாத் சிங்.