இராயக்கோட்டை பேருந்து நிலையத்தில் பயன்பாட்டிற்கு வராத அரசு கட்டிடங்கள்! பின்னணி என்னங்க அய்யா?

ஓசூர் ராஜ்குமார்,
கிருஷ்ணகிரி மாவட்டம், இராயக்கோட்டை பேருந்து நிலையத்தில் சுமார் பத்து கடைகள் அடங்கிய அரசு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. கடந்த 12.1.2021 அன்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அதிகாரிகள் முன்பு ரூ.50000 டெபாசிட் தொகை டிடி மூலமாக செலுத்தி இந்த 10 கடைகளும் வாடகைக்கு ஏலம் விடப்பட்டன.
இதில் முதல் கடை 53,000 கடைசி கடை 40,000 முறையே ஏலம் எடுக்கப்பட்டது.
ஏலம் எடுக்கப்பட்ட இந்த வாடகை தொகைகள் அதிகமென கூறி 15.02.2021 அன்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மறு ஏலம் விடப்பட்டது. ஆனால் இம்முறை முதல்முறை கேட்கப்பட்ட ஏலத் தொகையை விட அதிகமாக ஏலம் கோரினர்.
மறு ஏலத்தில் முதல் கடை ரூ.101000 கடைசி கடை 47000 முறையே ஏலம் எடுக்கப்பட்டது.
ஏலம் எடுக்கப்பட்ட முழு தொகைகளும் ஜி.எஸ்.டி. உட்பட டிடி மூலம் அரசுக்கு செலுத்தப்பட்ட நிலையிலும் கடந்த எட்டு மாதங்களாக இந்த 10 கடைகளில் ஒரு கடைகள் கூட பொதுமக்கள் பயன்பாட்டிற்கோ வரவில்லை.
ஏலம் எடுத்த ஒருவர்கூட கடைகளின் சாவியை வாங்கவில்லை. இதனை அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை.
இதில் அரசியல்வாதிகளின் பின்னணி இருக்கின்றதா, அல்லது தனிப்பட்ட நபர்களின் சுயலாபத்திற்காக கடைகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லையா, மேலும் 15.2.2021 இரண்டாவது ஏலம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே உழவர் முன்னணி மாநில பொதுச்செயலாளர் தெய்வத்திரு. துருவாசன் அவர்களும் சமூக ஆர்வலர்களும் இந்த ஏலத்தை கண்டித்து அதிகாரிகளிடம் மேல்முறையீடு செய்துள்ளனர்.
ஆனால் அவர்களின் கோரிக்கைகளை ஏற்காமல் அதிகாரிகள் மிகவும் அலட்சியப் படுத்திய நிலையில் அரசாங்க சொத்துக்களான மேற்படி கடைகள் மூடியே வைக்கப்பட்டுள்ளது,
எனவே உடனடியாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் மறு ஏலத்தில் சரியான கடை வாடகையை நிர்ணயிக்க வேண்டும் என்றும், இதில் நேரடியாக வியாபாரிகளும், விவசாயிகளும், மற்றும் பொதுமக்களும் பயன்பட நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.