மாங்காவை கூட விடமாட்டீங்களாடா?

கு.அசோக்,
வாணியம்பாடி அருகே மாந்தோப்புகளில் தொடர்ந்து டன் கணக்கில் மாங்காய் கொள்ளையடித்த 2 இளைஞர்களை போலிசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் வாணியம்பாடி அடுத்த காவலூர் சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் மாந்தோப்புகளில் விளைந்துள்ள மாங்காய்கள் டன் கணக்கில் கொள்ளை போவதாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் மந்தாரகுட்டை பகுதியை சேர்ந்த விவேகானந்தன் என்பவர் மாங்காய் தோப்பில் சுமார் 1 டன் மாங்காய் பறி போனதாக காவலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து போலிசார் வழக்கு பதிவு செய்து தொடர் மாங்காய் கொள்ளையில் ஈடுபட்டு வந்த மந்தாரகுட்டை பகுதியை சேர்ந்த சிரஞ்சீவி (21), அண்ணாமலை (20) ஆகியோரை கைது செய்து அவர்கள் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.