அமைச்சர் எனக்கு முதல் பரிசை கிடைக்க விடாமல் செய்துவிட்டார்! மாடுபிடி வீரர் அபிசித்தர் குற்றச்சாட்டு!

அமைச்சர் எனக்கு முதல் பரிசை கிடைக்க விடாமல் செய்துவிட்டார்! மாடுபிடி வீரர் அபிசித்தர் குற்றச்சாட்டு!

 கே.ஏ.ஜெகதீஸ்வரி!

  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி உலக புகழ்பெற்றதாகும் இந்நிலையில் இந்த ஆண்டு நடந்து முடிந்த போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற அபிசித்தர் பரிசை வாங்க மறுத்து நீதிமன்றம் செல்ல உள்ளதாக கோபம் கொப்பளிக்க தெரிவித்திருக்கிறார்.

 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக் கட்டுப் போட்டிகள் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றாலும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டிகளுக்கு தனி சிறப்பு உண்டு.

 இந்நிலையில், நேற்றைய தினம் அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வழக்கமாக 5 மணிக்கு போட்டி முடுவடையும் நிலையில் மூன்று பேர் முதலிடத்தில் இருந்ததால் போட்டி நேரம் நீட்டிக்கப்பட்டது.

 முடிவில் மதுரை மாவட்டம் கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்தி என்பவர் 18 காளைகளை அடக்கி முதல் பரிசை வென்றதாக அறிவிக்கப்பட்டது.

 17 காளைகளை அடக்கி, இரண்டாம் பரிசுக்கு சிவகங்கை மாவட்டம் பூவந்தியைச் சேர்ந்த அபிசித்தர் அறிவிக்கப்பட்டார்.

 அப்படியிருக்க போட்டியில் பாரபட்சம் இருப்பதாகக் கூறி இரண்டாம் பரிசுக்கு அறிவிக்கப்பட்ட அபிசித்தர், தனக்கான மோட்டார் சைக்கிள் பரிசை வாங்க மறுத்து வெளியேறினார்.

  பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு¢ அளித்த பேட்டியில், "கடந்த 2023ஆம் ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 30 மாடுகள் பிடித்தேன். 26 மாடுகள் பிடித்ததாகக் கூறி முதல் பரிசு வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் அரசியல் செய்து எனக்கு முதல் பரிசை கிடைக்க விடாமல் இந்த அரசு செய்து விட்டது. இதற்கு காரணம் அமைச்சர்தான். இம்முறை முதல் பரிசு பெற்ற கார்த்தி, கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் பரிந்துரையின் பேரில் வந்து மாடு பிடித்தார்.

  நான் 2 சுற்றுகளில் 11 மாடுகள் அடக்கினேன். அவர் 3 சுற்றுகளில் தான் 11 மாடுகளைப் பிடித்தார். நானும், கார்த்தியும் 17 மாடுகள் பிடித்தோம். இதை விழாக் குழுவினரும் கணக்கில் கொள்ளவில்லை.  எனக்கு பரிசு முக்கியமில்லை,நான் நீதிமன்றத்துக்குச் செல்வேன். வீடியோவைப் பார்த்து, இதே மேடையில் என்னை முதல் பரிசு பெற்றதாக அறிவிக்க வேண்டும்".

  இந்த புகார் தொடர்பாக அமைச்சர் பி. மூர்த்தி விளக்கம் அளிக்கையில், "ஜல்லிக்கட்டு என்பது பொதுவானது. எவ்விதப் பாகுபாடும் இன்றியே போட்டி நடத்தப்பட்டது. கடைசி சுற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து போட்டியாளர்கள் அனைவருக்குமே வாய்ப்பளித்தோம். விழாக் குழுவினரும்,மாவட்ட நிர்வாகமும் இணைந்து தகுதியின் அடிப்படையில்தான் பரிசுவழங்கப்பட்டது. அதிகாரிகளும் முறையாகச் செயல்பட்டு முடிவை அறிவித்துள்ளனர். குளறுபடி நடக்க வாய்ப்பே இல்லை. இரண்டாவது பரிசு பெற்றவரின் குற்றச்சாட்டை ஏற்க இயலாது" என அனைத்தையும் மறுத்தார்.