உதயசூரியன் தமிழகத்துக்கு உதிக்கக் கூடாது! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு!

ம.பா.கெஜராஜ்,
உதயசூரியன் அவர்களது குடும்பத்துக்கு உதிக்கிறதோ இல்லையோ தமிழகத்துக்கு உதிக்கக் கூடாது என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரச்சார கூட்டங்களில் பேசினார்.
இன்று தமிழக வந்த அவர் சிதம்பரம் மற்றும் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதிகளில் பாஜக சார்பில் போட்டியிடும் கார்த்தியாயினி மற்றும் நரசிம்மன் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், காங்கிரஸ் மற்றும் திமுகவை சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரைப் பற்றி எந்த விஷயங்களைப் பற்றி கேள்வி எழுப்பினார்கள் என்பது ஒரு பெரிய கேள்விக் குறி. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக எத்தனையோ எதிர்க்கட்சிகள் உள்ள மாநிலங்களில் கூட பலவிதமான திட்டங்களை கொண்டு வந்து மக்களுக்கு நல்லது செய்துள்ளது.
உதாரணமாக, பிஎம் முத்ரா யோஜனா திட்டம் ஏழை - எளிய மக்களுக்கு எந்த ஓர் ஆவணங்களுமின்றி பிரதமர் மோடி கியாரண்டி கொடுத்து குறைந்த வட்டியில் கடன் உதவி வழங்குகிறார். நாடு முழுவதும் 27 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் இந்தத் திட்டம் 47 கோடி மக்களுக்கு சென்றுள்ளது. அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் ரூ.5 ஆயிரத்து 427 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு மத்திய அரசு எண்ணற்ற திட்டங்களை செய்துள்ளது.
பிரதமர் மோடி மழைக்காலத்திலும், குளிர்காலத்திலும் வந்து செல்லும் பறவை போல வந்து செல்வதாக, தமிழக முதல்வர் கூறுகிறார். மைக்ரேட் பேர்ட் என்ற வார்த்தையே தவறு. நாட்டில் உள்ள யாரும் எங்கும் செல்லலாம். ஆனால், தமிழத்துக்கு பிரதமர் வந்து சென்றால் 'மைக்ரேட் பேர்ட்ஸ்' என செல்கிற அளவுக்கு நமது முதல்வரின் நிலைமை உள்ளது. தமிழகத்துக்கு பிரதமர் ஒவ்வெரு முறையும் வரும்போது பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். ஆனால், பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டித் திரும்பி போ என செல்கிற அவர்கள் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி என வரும்போது கலெக்ஷனுக்கு மட்டும் வருகிறார்கள்.
தமிழகத்தில் மதுவைக் கொண்டு வந்ததால் குடிப்பழக்கத்தால் எத்தனை குடும்பங்கள் கஷ்டபடுகிறார்கள். இம்மாநில மக்களை குடிப்பழக்கத்தில் இருந்து மீட்டு நல்ல வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம்.
முதல்வர் குடும்பம் வாழ வேண்டும் என்பதற்காக, போதைப் பொருட்களை இறக்குமதி செய்து இளைஞர்களின் வாழ்க்கையை முழுவதுமாக பாழாக்க நினைக்கும் முதல்வரின் குடும்பத்தை நாம் மீண்டும ஒருமுறை தேர்ந்தெடுக்கக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன். போதைப்பொருள் கடத்தல் வழங்கில் கைதான ஜாபர் சாதிக், அந்த குடும்பத்துடன் நேரடி தொடர்பு வைத்துள்ளார் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.
போதைப் பொருட்கள் மூலமாக கோடி கோடியாக சம்பாதித்து தனது குடும்பம் வாழ வேண்டும் என நினைக்கிறார்கள். போதைப் பொருட்கள் மூலம் வரக்கூடிய ஆதாயத்தில் பிழைக்கக் கூடிய எந்தக் குடும்பமும் வாழ்ந்தது இல்லை. பிறரின் வாழ்க்கையைக் கெடுத்து, அதன் மூலம் வரக்கூடிய ஆதாயம் தமிழகத்துக்கு வேண்டவே வேண்டாம். எந்த குடும்பத்துக்கும் வேண்டாம்.
போதைப் பொருட்கள் மூலம் ஆதாயம் வைத்துக்கொண்டு அரசியல் செய்யக் கூடிய குடும்பத்தை இந்தத் தேர்தலில் நாம் நிராகரித்து தோற்க்கடிக்க வேண்டும். உதயசூரியன் அவர்களது குடும்பத்துக்கு உதிக்கிறதோ இல்லையோ தமிழகத்துக்கு உதிக்கக் கூடாது. கிராமப் பகுதியில் உள்ள விவசாயிகளின் வாழ்வு மலர வேண்டும் என்றால் மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும்"
மேலும் அரிசி விலையை குவிண்டாலுக்கு ஏற்றிக் கொடுத்தது மத்திய அரசு, கார்த்தியாயினி இந்த சிதம்பரம் தொகுதிக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பெரிய பட்டியலை போட்டுள்ளார். அதை அவர் இவ்வளவு நம்பிக்கையாக உங்கள் மத்தியில் வாக்குறுதிகளாக சொல்கிறார் என்றால் அதற்கு தைரியம் வேண்டும்.
எப்படி அந்த தைரியம் வரும். பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும், கொடுப்பவர்களிடம் இருந்து கேட்டு தொகுதிக்கு கொடுக்கலாம் என்கிற தைரியம்.
தாய்மார்கள் எல்லாம் குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு வெயிலில் வந்திருக்கீங்க, வேட்பாளர் கார்த்தியாயினி நல்ல வேட்பாளர் படித்தவர் அவருக்கு வாக்களியுங்கள் என்று அவர் பேசினார்.