வங்கதேசத்தில் மாணவர் போராட்டம் மீண்டும் தீவிரமடைகிறது! இதுவரை 397பேர் பலி!

ம.பா.கெஜராஜ்,
தியாகிகளின் வாரிசுகளுக்கு குடியுரிமை பணிகளில் இட ஒதுக்கீடு வழங்கும் அரசின் முடிவை எதிர்த்து வங்கதேச மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் தற்போது வரை அங்கு 397 பேர் பலியாகி உள்ளனர்.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலகக் கோரி போராட்டம் நடத்தி வருவோருக்கும் போலிசாருக்கும் இடையே ஏற்கனவே மோதல் இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அங்கு வன்முறை வெடித்தது.
கடந்த ஜூலை மாதம் நடந்த வன்முறையில் 300 பேர் கொல்லப்பட்ட நிலையில், தற்போது 97 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஆக இதுவரை 397 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
சிராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு காவல்நிலையத்தை ஆயிரக்கணக்கான மக்கள் தாக்கியதாகவும், இதில் 13 காவல் அதிகாரிகள் உயிரிழந்ததாகவும் காவல்துறை கூறியுள்ளது.
வங்கதேசத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க காவலர்கள் கண்ணீர்ப் புகை குண்டு, ரப்பர் தோட்டாக்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் 200-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
வங்கதேசத் தலைநகர் டாக்காவில் மொபைல் மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இணைய சேவை அளித்துவரும் நிறுவனங்கள், உள்ளூர் ஊடகங்களில் இது அரசின் அறிவிப்பின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை எனத் தெரிவித்துள்ளனர்.
வங்கதேசத்தின் வடக்கு மாவட்டங்களான போக்ரா, பாப்னா மற்றும் ரங்பூர் போன்ற ஊர்கள் உட்பட நாடெங்கிலும் இறப்பு மற்றும் காயமடைந்தோர் எண்ணிக்கை பதிவாகி வருகிறது என வங்கதேச ஊடகம் மற்றும் ஏ.எஃப்.பி செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிறு (ஆகஸ்ட் 4) மாலை 6 மணியளவில் இருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் செய்திகளில் வெளியான தகவலின் படி, இந்த ஊரடங்கு உத்தரவு காலவரையின்றி நீடிக்கும் எனத் தெரியவருகிறது.
சில பகுதிகளில், ஆளும் அவாமி லீக் ஆதரவாளர்கள் மற்றும் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் இடையே மோதல் வெடித்துள்ளது என்று கூறப்படுகிறது.
"ஒட்டுமொத்த நகரும் போர்க்களமாக மாறிவருகிறது," என ஒரு காவலர் கூறுகிறார். ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் பெயர் குறிப்பிட விரும்பாத காவலர், மருத்துவமனைக்கு வெளிய இருந்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களைப் போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்ததாகக் கூறினார்.
பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்தி வரும் குழு கோருகிறது.
ஒரு குழுவினர் ஞாயிறு துவங்கி நாடு தழுவிய ஒத்துழையாமையை அறிவித்துள்ளனர். மேலும், இவர்கள் குடிமக்களை வரி மற்றும் பயன்பாட்டு கட்டணங்களைச் செலுத்த வேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றனர். மாணவர்கள் தொழிற்சாலைகள் மற்றும் பொது போக்குவரத்தை மூடவும் அழைப்பு விடுத்துள்ளனர்.
கடந்த மாதம் வங்கதேசக் குடிமைப் பணிகளுக்கு அறிவிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடங்கிய மாணவர் போராட்டம், இப்போது அரசுக்கு எதிரான போராட்டமாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில் பங்களாதேஷில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக இருக்கும் படி இந்திய தூதரகம் அறிவுறுத்தி இருக்கிறது.