வேலூர் கோட்டையில் இருந்து என்னை டெல்லி கோட்டைக்கு அனுப்புங்கள் அதிமுக வேட்பாளர் டாக்டர் எஸ். பசுபதி தீவிர பிரச்சாரம்!
ம.பா.கெஜராஜ்,
வேலூர் கோட்டையில் இருந்து என்னை டெல்லி கோட்டைக்கு அனுப்புங்கள் என்று அதிமுக வேட்பாளர் டாக்டர் எஸ். பசுபதி தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். அதே போல் சிட்டிங் எம்பியாக இருக்கும்¢ திமுகவைச் சேர்ந்த கதிர் ஆனந்த் இம்முறையும் களத்தில் இறக்கிவிடப்பட்டிருக்கிறார். அடுத்ததாக புதிய நீதி கட்சியின் தலைவர் ஏசி சண்முகம் பாஜக வேட்பாளராகவும், கோவையைச் சேர்ந்த மகேஷ் என்பவர் நாம் தமிழர் கட்சியிலும், நடிகர் மன்சூர் அலிகான் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர்.
வேலூர் லோக்சபா தொகுதியில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் விவரம்.
*வேலூர்
*வாணியம்பாடி
*ஆம்பூர்
*அணைக்கட்டு
*கே.வி.குப்பம் (தனி)
*குடியாத்தம் (தனி)
என மொத்தம் ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளடங்கி இருக்கிறது.
இதில் வேலூரில் ப.கார்த்திகேயனும், அணைக்கட்டில் ஏ.பி.நந்தகுமாரும், குடியாத்தத்தில் அமுலு விஜயன், ஆம்பூரில் வில்வநாதனும் திமுக சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினராக உள்ளனர்.
அதேபோல் வாணியம்பாடியில் அதிமுகவைச் சேர்ந்த செந்தில்குமார்,கே வி குப்பம் தொகுதியில் அதிமுக உடன் கூட்டணி வைத்து இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற புரட்சி பாரத கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தியும் சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த ஆறு சட்டமன்றத் தொகுதிகளுமே பாலாற்றை மையப்படுத்தி அமைந்துள்ளது.
வேலூர் லோக்சபா தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை:15,09,964.
ஆண் வாக்காளர்கள்: 7,31,831.
பெண் வாக்காளர்கள்: 7,77,922.
மூன்றாம் பாலின வாக்காளர்கள்:211.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியை பொருத்தமட்டில் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கக் கூடிய இடத்தில் இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களை உள்ளடக்கிய சிறுபான்மையினர் இருக்கின்றனர். அதேபோல் வன்னியர், பட்டியலின பிரிவினரும், முதலியார்கள், யாதவர்கள், நாயுடு மற்றும் இன்ன பிற ஜாதிகள் இந்த தொகுதியில் உள்ளனர்.
இவர்களில் வாணியம்பாடி ஆம்பூர் குடியாத்தம் மற்றும் வேலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் இஸ்லாமியர்கள் வாக்கு அதிக சதவீதத்தில் உள்ளது.
அணைக்கட்டு, வாணியம்பாடி ஒன்றியம், குடியாத்தம் ஒன்றியம் போன்ற பகுதிகளில் வன்னியர் சமுதாயத்தினர் உள்ளனர்.
கிறிஸ்தவர்கள் சி.எஸ்.ஐ., ஆர் சி, பெந்தகோஸ்தே மற்றும் தனிப்பட்ட சபை என்று வைத்து நடத்திக் கொண்டிருந்தாலும் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு தான் தான் ஓட்டு போட வேண்டும் என்று சொல்லக்கூடிய தலைமை அதிகாரம் எவரிடமும் இல்லை.
இருந்தாலும் கூட கிறிஸ்துவ மதத்தினர் மீது ஆங்காங்கே நடத்தப்படும் தாக்குதல் பாகுபாடு போன்ற விஷயங்களால் கிறிஸ்தவர்களின் ஓட்டு 90% பாஜகவுக்கு கிடைக்க வாய்ப்பே இல்லை. மதசார்பற்ற கூட்டணி வைத்திருக்கும் திமுக அல்லது அதிமுக வுக்கோ தான் அந்த வாக்குகள் செல்லும்.
ஆனால் இஸ்லாமியர்கள் வாக்கு அப்படி இல்லை, பாஜக வேட்பாளருக்கு எவரும் வாக்களிக்கக் கூடாது என்று இமாம்கள் அறிவித்துவிட்டால் ஒரே ஒரு சதவீத வாக்கு கூட தாமரை சின்னத்திற்கு அளிக்க மாட்டார்கள்.
இந்த மனப்பான்மை நாடெங்கும் இருந்த போதிலும், வேலூர் தொகுதியில் இது சற்று கூடுதலாகவே உள்ளது. ஏனென்றால் கடந்த 2019 ஆண்டு நடந்த தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துடன் இதே ஏசி சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். அப்போது இந்தக் கூட்டணியில் பாஜக இடம்பெற்று இருந்தது.
அப்போது, வாணியம்பாடி மற்றும் ஆம்பூரில் இஸ்லாமியர்கள் வாக்குகள் ஒட்டுமொத்தமாக ஏசி சண்முகத்திற்கு எதிராக அளிக்கப்பட்டது. ஆக சுமார் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் அவரை மக்கள் தோற்க்கடித்தனர்.
இதே ஏசி சண்முகம் கடந்த 2014 ஆம் ஆண்டில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டார். அப்பொழுது அவரை எதிர்த்து களம் கண்ட அதிமுக வழக்கறிஞர் பா.செங்குட்டுவன் சுமார் 50,000 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.
இந்த ஏசி சண்முகம் இம்முறை தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இவருக்கு வாக்காளர்கள் 2014 ஆம் ஆண்டு கொடுத்த வாக்குகள் அளவிற்கு தான் வழங்குவார்கள் என்று தெளிவாகவே களம் நிலை உணர்த்துகிறது.
இதையெல்லாம் புரிந்து கொண்டிருக்கிற தாமரை வேட்பாளர் ஏசி சண்முகம் இஸ்லாமியர் வாக்குகளை சிதறடிக்கும் நோக்கில் மன்சூர் அலிகானை களம் இறக்கியிருக்கிறார் என்றும் பரவலாக கூறப்படுகிறது.
அதேபோல் இவருக்காக பூத் ஏஜெண்டுகளின் கட்டமைப்பு கிடையாது. ஆகவே கூட்டணியில் இருக்கும் பாமகவை மட்டுமே நம்பி உள்ளனர். ஆனால் பாமகவினர் வேலூர் மக்களவைத் தொகுதி முழுக்க பரவி இருக்கவில்லை என்பதுதான் யதார்த்தம்.
அடுத்ததாக அதிமுக வேட்பாளர் மருத்துவர் பசுபதி சிரித்த முகம், நல்ல வேட்பாளர், நன்கு படித்தவர் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் திமுக மற்றும் பாஜக வேட்பாளர்களான இருவரும் இந்த தொகுதியில் வாக்குரிமை இல்லாதவர்கள்.
ஆனால் பசுபதிக்கு வேலூர் மக்களவைத் தொகுதியில் வாக்கு இருக்கிறது, ஆக அவர் உள்ளூர் வேட்பாளராக பார்க்கப்படுகிறார்.
இவருக்கு ஆதரவாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தேமுதிக தலைவர் பிரேமலதா மற்றும் விந்தியா ஆகியோர் களப்பணியாற்றிக் கொண்டிருக்கும் நிலையில் அதிமுக வேட்பாளருக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது.
முன்னாள் அமைச்சர் அதிமுகவை சேர்ந்த கே.சி.வீரமணி இரட்டை இலை சின்னம் வெற்றி பெறுவதற்காக சின்சியராக வேலை செய்துகொண்டிருக்கிறார். அதே போல் மாவட்ட செயலாளர்கள் வேலழகன், எஸ்.ஆர்.கே.அப்பு என்கின்ற ராதாகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட செயலாளரும், மாவட்ட பொருளாளருமான காகிதப்பட்டரை மூர்த்தி, மாவட்ட கழக இளைச்செயலாளர் வழக்கறிஞர் தாஸ், தொழில் நுட்பபிரிவு மண்டல தலைவர் சதிஷ், அம்மா பேரவை மாவட்ட தலைவர் வழக்கறிஞர் அ.அறிவரசன், வட்டச்செயலாளர் ஜி.கே.முரளி, சி.கே.சிவாஜி, ஆகியோர் பசுபதியின் வெற்றிக்காக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இம்முறை எஸ்டிபி கட்சியினர் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்கள் ஆகவே இஸ்லாமியர் வாக்குகள் கணிசமாக அதிமுகவுக்கு கிடைக்கும்.
இந்நிலையில் அதிமுக வேட்பாளரின் பிரச்சாரத்தில் வேகம் கூடியிருக்கிறது. வாக்கு சேகரிப்பின் போது, அதிமுக வேட்பாளர் பசுபதி என்னை "வேலூர் கோட்டையில் இருந்து டெல்லி கோட்டைக்கு" அனுப்புங்கள் என்றும் நான் கடந்த 14 ஆண்டுகளாக அரசு மருத்துவராக பணியாற்றி வந்து தற்போது மக்கள் பணியாற்ற அரசு பணியை ராஜினாமா செய்துவிட்டு உங்களை நம்பி போட்டியிடுகிறேன்.
எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிங்கள் என்று பேசி வருகிறார்.
திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரத்தின் போது, பெண்களை குளிர்விப்பதாக நினைத்து பான்ட்ஸ் பவுடர் பற்றி பேசியது அவருக்கு எதிரடியாக போய்விட்டது.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் வாக்கு கேட்டு வந்தவர் அதன் பின்னர் தொகுதி பக்கமே அவர் தலைகாட்டவில்லை என்றும், வாக்குறுதிகள் எதையும் செய்யவில்லை என்றும் ஆங்காங்கே கதிர் ஆனந்துக்கு எதிர்ப்பு கிளம்புகிறது. குறிப்பாக வாணியம்பாடி நியுடவுன் ரயில்வே கேட் பிரச்சனை அவரை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றன.
ஏற்கனவே கடந்த ஆறு மாதங்களாக வேலூர் லோக்சபா தொகுதியில் மருத்துவ முகாம் பணப்பட்டுவாடா வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் விளையாட்டு ஷோ என்று பரபரப்பை கிளப்பி விட்டிருந்த ஏ.சி.சண்முகம் ஒரு பக்கம் அடுக்கடுக்கான வாக்குறுதிகளை அள்ளி வீசிக்கொண்டு தான் சார்ந்திருக்கும் பிரிவினரை மட்டுமே நம்பி பயணித்துக் கொண்டிருக்கிறார்.
இருந்தாலும் கூட அவருக்காக பிரதமர் மோடி பிரச்சாரம் செய்ய வேலூர் வரவிருப்பது அவருக்கு சற்று ப்ளஸ் பாயிண்டாக அமையலாம்.