சிவசேனாவின் ஜிப்பாவை உருவும் மகாராஷ்டிர பா.ஜ.க.?

ஜார்ஜ் ரவி,
மகாராஷ்டிராவை ஆட்சி செய்துக் கொண்டிருக்கும் சிவசேனா - காங் கூட்டணிக்குள் உரலை ஏற்படுத்தி அவர்கள் ஜிப்பாவை பா.ஜ.க.உருவிவிட்டது. இதன் காரணமாக அங்கு பல்வேறு காட்சிகள் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன.
அப்படியிருக்க இன்றைய சூழலைப்பற்றிப் பார்ப்போம்
சிவசேனாவின் அதிருப்தியாளர் எனப்படும் ஏக்நாத் ஷிண்டேவுடன் தங்கி உள்ள 16 எம்எல்ஏக்களுக்கு தகுதி நீக்க நோட்டீசை, மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை துணை சபாநாயகர் அனுப்பி உள்ளார்.
மேற்படி ஏக்நாத் ஷிண்டே தமது ஆதரவு எம்எல்ஏக்களுடன், அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளார். அவருடன் சுயேச்சை எம்எல்ஏக்கள் உட்பட சுமார் 40 எம்எல்ஏக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன், ஏக்நாத் ஷிண்டே எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யும் பட்சத்தில், மகாராஷ்டிர மாநிலத்தில், சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு கவிழும். இதை அடுத்து தனிப் பெரும் கட்சியாக உள்ள எதிரக்கட்சி பாஜக, சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடன், மாநிலத்தில், ஆட்சியை அமைக்கும் பணிகளை கச்சிதமாக தொடங்கும்.
அப்படியிருக்க, இன்று, மகாராஷ்டிர மாநில முதலமைச்சரும், சிவசேனா கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே தலைமையில், அக்கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஏக்நாத் ஷிண்டேவுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் தங்கி உள்ள சிவசேனா எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டேவுடன் உள்ள 16 சிவசேனா எம்எல்ஏக்களுக்கு, மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை துணை சபாநாயகர் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
வரும் 27 ஆம் தேதி மாலைக்குள் விளக்கம் அளிக்கும்படி அவர் அதில் கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் அதிருப்தி எம்எல்ஏக்கள் பதில் அளிக்காத பட்சத்தில், அவர்களை தகுதி நீக்கம் செய்ய, சபாநாயகருக்கு அதிகாரம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, சிவசேனா அதிருப்தியாளர் ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா பாலாசாகேப் தாக்கரே என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள்து, இந்த சூழலில் அவரையும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களையும் அசாமிலிருந்து வெளியேற்றுமாறு அம்மாநில காங்கிரசார் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள்.
பா.ஜ.க குறி தப்பாது போலிருக்கே?!!