மோடியை முந்தும் முதல்வர்! மதுரையில் போக்கு வரத்து மாற்றம் -ராமநாதபுரம் விசிட்!!

ம.பா.கெஜராஜ்,
ராமநாதபுரத்தில் மோடி போட்டியிடப்போகிறார் என்று கடந்த சில மாதங்களாகவே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது, இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரண்டு நாள் பயணமாக ராமநாதபுரம் செல்கிறார். அவர் மதுரையில் சில நிகழ்சிகளிலும் பங்கேற்கிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளையும், நாளை மறுநாளும் (வியாழன், வெள்ளிக்கிழமை) ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் இன்று மாலை சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை செல்கிறார்.
பின்னர் விமான நிலையத்தில் இருந்து காரில் மதுரை முனிச்சாலை பகுதிக்கு வருகிறார். அங்கு மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிட வளாகத்தில் நிறுவப்பட்ட பழம்பெரும் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் உருவச்சிலையை திறந்து வைக்கிறார். இந்த விழாவைதொடர்ந்து ரிங்ரோடு பகுதியில் உள்ள ஓட்டலில் தங்குகிறார்.
அதனைத்தொடர்ந்து, நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி அளவில் கார் மூலம் ராமநாதபுரம் புறப்படுகிறார். மாவட்ட எல்லையான பார்த்திபனூர் பகுதியில் இருந்து ராமநாதபுரம் வரை 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அவருக்கு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
மதியம் 1 மணி அளவில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பயணியர் தங்கும் விடுதிக்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாலை 4 மணி அளவில் ராமநாதபுரம் அருகே பேராவூர் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் நடைபெறும் தென்மண்டல அளவிலான தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.
பின்னர் ராமேசுவரம் சென்று அங்குள்ள தனியார் விடுதியில் இரவு தங்குகிறார். நாளை மறுநாள் காலை 10 மணி அளவில் மண்டபம் கலோனியல் பங்களா அருகில் நடைபெறும் மீனவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு, மீனவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றி அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்குகிறார். முதல்-அமைச்சர் கலந்துகொள்ளும் விழாவுக்காக ராமநாதபுரம் அருகே பேராவூர் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து மாற்றம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி மதுரையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை முதல் இரவு வரை பஸ்கள், சரக்கு வாகனங்கள், லாரிகள் மற்றும் இதர வாகனங்களின் சாலை போக்குவரத்தில் கீழ்கண்டவாறு மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி விழாவிற்கு வரக்கூடிய சாலைகளான அனுப்பானடி ரோடு சந்திப்பு முதல் புதுராம்நாட் ரோடு, சி.எம்.ஆர். ரோடு, செயின்ட் மேரீஸ் சந்திப்பு முதல் பழைய குயவர் பாளையம் ரோடு, ஓபுளா படித்துறை முதல் சிமெண்டு ரோடு முனிச்சாலை ரோடு சந்திப்பு ஆகிய சாலைகளின் வாகன போக்குவரத்து காமராஜர் சாலையினை பயன்படுத்தி கீழ்கண்ட வகையில் தங்கள் இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுகொள்ளப்படுவதாக மாவட்ட காவல் துறை கேட்டுக் கொண்டிருக்கிறது.
அதில், அனுப்பானடி ரோடு சந்திப்பிலிருந்து புதுராம்நாட் ரோடு மற்றும் சி.எம்.ஆர். ரோடு ஆகிய சாலைகள் வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் தெப்பக்குளம் 16-கால் மண்டபம் சென்று வலதுபுறம் திரும்பி காமராஜர் சாலை வழியாக செல்லலாம்.
செயின்ட் மேரீஸ் சந்திப்பு மற்றும் சிந்தாமணி ரோட்டிலிருந்து பழைய குயவர்பாளையம் வழியாக தெப்பக்குளம் நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் மஹால் ரோடு. கீழவாசல் சந்திப்பு சென்று காமராஜர் சாலை தெப்பக்குளம் நோக்கி செல்லலாம்.
நெல்பேட்டை மற்றும் ஓபுளா படித்துறையிலிருந்து தெப்பக்குளம் நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் அம்சவள்ளி சந்திப்பு, கீழவாசல் சந்திப்பு சென்று காமராஜர் சாலை வழியாக தெப்பக்குளம் செல்ல வேண்டும்.
காமராஜர் சாலையில் கீழவாசல் சந்திப்பு முதல் பழைய கணேஷ் தியேட்டர் வரை, பழைய குயவர்பாளையம் சாலையில் செயின்ட்மேரீஸ் சந்திப்பில் இருந்து முனிச்சாலை சந்திப்பு வரை போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்றும் காவல் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.