அயோத்தி ராமர் கோவில் கருவரையில் முதல் பூஜை செய்த பிரதமர் மோடி!

அயோத்தி ராமர் கோவில் கருவரையில் முதல் பூஜை செய்த பிரதமர் மோடி!

 உ.சசிகுமார்,

 அயோத்தியில் கட்டப்பட்டிருக்கும் ராமர் கோவில் கருவரையில் பிரதமர் மோடி முதல் பூஜையை செய்தார்.

 கடந்த 2019ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிய ராமர் கோயில் கட்டும் பணி கடந்த 2020ம் ஆண்டு தொடங்கப்பட்டது.  2.7 ஏக்கர் பரப்பளவில் 5 மண்டபங்கள், தரை தளம் உட்பட 3 தளங்களுடன் சுமார் 2,000 கோடி ரூபாய் செலவில் கோயில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கோவிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

   அயோத்தி நகரில் பல்வேறு இடங்களில் மேடை அமைக்கப்பட்டு இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள், வந்திருந்ததால் அயோத்தியே விழாக்கோலம் பூண்டிருந்தது. கும்பாபிஷேக விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.

  ஆனால் சினிமா நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட 7,000 க்கும் மேற்பட்ட விவிஐபிக்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க அழைக்கப்பட்டிருந்தனர்.

   கும்பாபிஷேக விழா காலை 10 மணிக்கு மங்கள இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று காலை விமானம் மூலம் டெல்லியிலிருந்து அயோத்தி வந்தடைந்தார். முன்னதாக, பிராண பிரதிஷ்டை பூஜையில் பங்கேற்பதற்காக அவர் கடந்த 11 நாட்கள் விரதம் இருந்தார். இதில் வெறும் தரையில் படுத்து உறங்கிய அவர் தினமும் பழங்கள் மற்றும் இளநீர் மட்டும் ஆகாரமாக எடுத்துக் கொண்டார்.  மேலும், ராமர் தொடர்புடைய பல்வேறு கோயில்களுக்கு சென்று வழிபட்டார். அயோத்தி விமான நிலையத்தில் இருந்து காலை 10.55 மணிக்கு ராம ஜென்மபூமியை பிரதமர் மோடி வந்தார்.

  இந்நிலையில், பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரதமர் மோடிக்கு கோவிந்த் தேவ் கிரி ஜி மகாராஜ் தண்ணீர் கொடுத்து மோடியின் விரதத்தை முடித்து வைத்தார்.

 பின்னர், பிற்பகல் 12.29 மணிக்கு சுபமுகூர்த்த நேரத்தில், குழந்தை ராமர் சிலையின் கண்ணில் கட்டப்பட்டிருந்த துணி அகற்றப்பட்டு, பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமர் மோடி, உபி ஆளுநர் ஆனந்தி பென் படேல், மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ராம ஜென்ம பூமி அறக்கட்டளை தலைவர் நிருத்ய கோபால் தாஸ் உள்ளிட்டோர் பிராண பிரதிஷ்டை பூஜையில் பங்கேற்றனர். 121 வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க பிரதமர் மோடி முக்கிய பூஜைகளை செய்தார்.

   குழந்தை ராமர் சிலைக்கு மலர் தூவி மந்திரங்களை உச்சரித்து பூஜை செய்த பிரதமர் மோடி, மகா ஆரத்தி காட்டி கோயிலை முறைப்படி திறந்து வைத்தார். அப்போது கோயில் வளாகம் முழுவதும் வானில் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன. அங்கு கூடியிருந்த அனைவரும் ஜெய் ஸ்ரீராம் கோஷமிட்டு ராமரை வணங்கினர். இந்த பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சி நாடு முழுவதும் பல்வேறு கோயில்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதன் மூலமாக மக்கள் நிகழ்ச்சியை கண்டு தரிசித்தனர்.

  பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கவில்லை.