வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ஆ.ராஜா திடீர் மரணம்! திமுகவினர் அதிர்ச்சி!

கதிர்,
சேலத்து சிங்கம் என்றழைக்கப்பட்ட திமுகவின் முன்னோடிகளில் ஒருவரான வீரபாண்டி ஆறுமுகத்தின் இரண்டாவது மகன் ராஜா இன்று காலமானார்.
வீரபாண்டி ஆறுமுகம் உயிருடன் இருந்தவரை சேலம் மாவட்டத்தில் திமுகவை அமர்களமாக வைத்திருந்தார்.
துணிச்சல் மிக்கவர் ஆறுமுகம் என கருணாநிதியிடம் பெயரெடுத்தவர்.
இந்நிலையில் வீரபாண்டி ஆறுமுகத்தின் அரசியல் வாரிசாக செயல்பட்டவர் அவரது மூத்த மகன் செழியன்.
ஆனால் அவர் உடல்நலக்குறைவால் காலமானதை அடுத்து, அவரது இடத்தை இரண்டாவது மகன் வீரபாண்டி ராஜா நிரப்பினார்.
அரசியலுக்கு வந்த கையோடு அப்பா எனக்கு எம்.எல்.ஏ. சீட்டு வாங்கித் தங்க என்று அவரது தந்தை வீரபாண்டி ஆறுமுகத்திடம் ராஜா கேட்க, கருணாநிதியிடம் பேசி, மகன் ராஜாவுக்கு எம்.எல்.ஏ.சீட் பெற்றுக்கொடுத்தார்.
பின்னர், வீரபாண்டி ஆறுமுகம் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்ததை அடுத்து, சேலம் மாவட்டத்தை மூன்றாக பிரித்து வீரபாண்டி ராஜாவுக்கு மாவட்டபொறுப்பாளர் பதவி வழங்கினார் ஸ்டாலின். ஆயிரம் முரண்பாடுகள் இருந்தாலும் அவரது தந்தையை போல் கட்சிப்பணியில் களப்பணியாற்றுவார் என நம்பிக்கை வைத்து வீரபாண்டி ராஜாவுக்கு அந்த பொறுப்பை வழங்கினார் ஸ்டாலின்.
தலைமை மற்றும் தலைமை பொறுப்பில் உள்ள துரைமுருகன் போன்றவர்களிடம் பல விஷயங்களை நேரடியாக சுட்டிக்காட்டி பேசி அவரது தந்தையை நினைவு கூர்ந்த ஆ.ராஜா, வாழையடி வாழையாக கழக பணிகளில் மும்முரம் காட்டிவந்தார்.
இந்நிலையில் அவர் இயற்கை எய்தினார். இன்று பிறந்தநாள் என்பதால் அவரது தந்தை சிலைக்கு மாலை அணிவித்து விட்டு காரில் வீடு திரும்பிகொண்டிருந்தபோது மயங்கி விழுந்துள்ளார் உடனடியாக அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர்.
அவரது மறைவு செய்தி அறிந்து திமுக தலைவரும், முதல்வருமான முக.ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.