கிளியும் அதன் உரிமையாளரும் கைது! தங்கர் பச்சான் வெற்றி பெறுவார் என்று ஜோசியம் சொன்னதால் நடவடிக்கை!

தாம்பரம்.முரளிதரன்,
கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக விஷ்ணு பிரசாத், பாமக சார்பாக தங்கர்பச்சான், தேமுதிக சார்பாக சிவக்கொழுந்து மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக மணி வாசகம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இவர்களில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆரணியின் சிட்டிங் எப்பியாக உள்ளார். இவர் அன்புமணியின் மனைவி சௌமியாவின் சகோதரர் ஆவார். ஆகவே அங்கு பிரச்சாரம் கலை கட்டி வருகிறது.
இந்நிலையில் பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் போகிற போக்கில் ரோடு ஓரத்தில் இருந்த கிளி ஜோசியரிடம் வாக்கு கேட்டு இருக்கிறார்.
அப்பொழுது கிளி ஜோசியம் பார்த்து வந்த செல்வராஜ் என்பவர் கிளியை அழைத்து சீட்டு எடுத்து பார்த்த போது அதில் அய்யனார் வந்துள்ளார்.
ஆகவே தங்க பச்சான் வெற்றி பெறுவார் என்று ஜோசியர் சொன்னார்.
இந்த தகவல் சில சமூக ஊடகங்களில் வெளியானது.
அதன் அடிப்படையில் பாய்ந்து வந்த தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகள் கிளியை பறிமுதல் செய்ததோடு உரிமையாளர் செல்வராஜையும் கைது செய்து இருக்கிறார்கள்.
இதனால் டென்ஷனான பாமக நிறுவனர் மருத்துவர் ச. ராமதாசு அவர்கள் கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது.
கடலூர் தொகுதியில் தங்கர்பச்சான் வெற்றி என்று
சோதிடம் கூறியதால் கிளி சோதிடர் கைது: முட்டாள் திமுக அரசின் பழிவாங்கும் போக்குக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்!
கடலூர் மாவட்டம் தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனார் ஆலயம் அருகில் கிளி சோதிடம் பார்த்து வந்த செல்வராஜ் என்பவரை தமிழக அரசின் வனத்துறை கைது செய்திருக்கிறது.
கடலூர் தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் இயக்குனர் தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் என்று கிளிசோதிடம் பார்த்து கூறியதை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் இந்த பழிவாங்கும் நடவடிக்கையை திமுக அரசு மேற்கொண்டுள்ளது. பாசிசத்தின் உச்சமான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் என்று கிளி சோதிடர் கூறியதையே தாங்கிக் கொள்ள முடியாத திமுக அரசு, தேர்தல் முடிவு அப்படியே அமைவதை எப்படி தாங்கிக் கொள்ளும்? சோதிடம் கூறியதற்காக கிளி சோதிடரை கைது செய்த திமுக அரசு, தங்கர்பச்சானுக்கு வாக்களித்ததற்காக கடலூர் தொகுதியைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களை கைது செய்வார்களா? இந்த நடவடிக்கை மூலம் திமுகவின் தோல்வி பயம் அப்பட்டமாக தெரிகிறது.
பகுத்தறிவு கட்சி என்று கூறிக்கொள்ளும் திமுகவால் சோதிடத்தில் நல்ல செய்தி கூறியதைக் கூட தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் அக்கட்சி எந்த அளவுக்கு முட்டாள் தனத்திலும், மூட நம்பிக்கையிலும் ஊறியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
கிளியை கூண்டில் அடைத்தது குற்றம் என்றும், அதற்காகத் தான் சோதிடர் செல்வராஜ் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அரசுத் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான கிளி சோதிடர்கள் கிளிகளை கூண்டில் வைத்து தான் சோதிடம் பார்க்கிறார்கள். இப்போது கைது செய்யப்பட்ட சோதிடர் அதே இடத்தில் பல ஆண்டுகளாக சோதிடம் பார்த்து வருகிறார்.
அப்போதெல்லாம் அவர் கைது செய்யப்படவில்லை. மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆவாரா? என்று அவரது துணைவியார் நூற்றுக்கணக்கான சோதிடர்களிடம் கிளி சோதிடம் பார்த்திருப்பார். அந்த கிளி சோதிடர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. ஆனால், இப்போது தங்கர்பச்சானுக்கு சோதிடம் கூறிய பிறகு சோதிடர் கைது செய்யப்படுகிறார் என்றால் அதற்கான காரணத்தை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டின் காடுகளில் லட்சக்கணக்கான மரங்களும், ஆயிரக்கணக்கான விலங்குகளும் அழிக்கப்படுகின்றன. அவற்றையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் திமுக அரசு, ஓர் ஏழை கிளி சோதிடரை கைது செய்து அதன் வீரத்தைக் காட்டியிருக்கிறது. அந்த சோதிடரின் பிழைப்பில் மண்ணைப் போட்டிருக்கிறது. இதற்குக் வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தகவலை பாமக தலைவர் அன்புமணி ராமதாசு நமது எக்ஸ் பதிவிலும் வெளியிட்டு இருக்கிறார்.