"நைன்டி மில்லி சரக்கு"அக்டோபரில் விற்பனை தொடக்கம்!

ஜி.சாந்தகுமார்,
அக்டோபர் மாதம் முதல் நைன்டி மில்லி லிட்டர் மதுபானம் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
தமிழ்நாட்டில் 4,829 டாஸ்மாக் கடைகள் மூலம் மது விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், குறைந்தபட்ச அளவாக 180 மில்லி லிட்டரில் தொடங்கி 750 மில்லி வரை மதுபான பாட்டில்கள் விற்கப்படுகின்றன.
அப்படியிருக்க, டாஸ்மாக்கில் 90 மி.லி மது டெட்ரா பேக்குகளில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்திற்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
90 மில்லிலிட்டர் பாட்டில் விற்பனைக்கு வந்தால் மது குடிக்கும் அளவு சற்று குறையும் என மதுப் பிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் 90 மில்லி பாட்டிகள் மற்றும் டெட்ரோ பாக்கெட்டுகளில் மதுவை அடைத்து விற்பனை செய்வது தொடர்பாக பல கட்டங்களாக ஆலோசனைகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் 90 மில்லி மது விற்பனைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 90 மில்லி பாட்டில்கள் மற்றும் டெட்ரா பாக்கெட்டுகளில் மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஏற்கெனவெ அதிகாரிகள் குழு இந்த மாநிலங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
தெலங்கானாவில் மாநிலம் முழுவதும் மது விற்பனையில் 90 மில்லி மதுபாட்டில்கள் தான் பெரும் அளவில் விற்பனை ஆகின்றன. ஆனால் கேரளாவில் விற்பனை சூடுபிடிக்கவில்லை.
அண்மையில் மதுபான உற்பத்தியாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனையில் 90 மில்லி மது பாட்டில்களுக்கான உற்பத்தி செலவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 90 மில்லி மதுபானம் சராசரியாக ரூ.80 ஆக இருக்கலாம். டாஸ்மாக்கில் தற்போது 180 மில்லி மதுபாட்டில் ரூ.140க்கு விற்பனை செய்யப்படுகிறது. 6 மாதங்களுக்குள் உற்பத்தியை துவங்குவதாக உற்பத்தியாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். எனவே வரும் அக்டோபர் மாதத்திற்குள் கடைகளில் 90 மில்லி மது பாட்டில்கள் விற்பனைக்கு வரும் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.