கிறிஸ்தவ பள்ளியை இடம் மாற்றாத வழக்கு! ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்பு!

  கிறிஸ்தவ பள்ளியை இடம் மாற்றாத வழக்கு! ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்பு!

ம.பா.கெஜராஜ்,

  நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்திய தற்காக மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர். தனியார் பள்ளியின் கோரிக்கையை ஏற்று, வேறுஇடம் வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

 இது பற்றின விவரம் வருமாறு,

 கடலூ£,¢ கூத்தப்பாக்கத்தில் உள்ள தேவநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான 3.40 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள புனித ஜோசப் மெட்ரிகுலேஷன் பள்ளியை அகற்றக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பாஜக ஆன்மிக மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவின் மாநில செயலாளர் வினோத் ராகவேந்திரன் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார்.

  இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், அந்த தனியார் பள்ளிக்கு மாற்று இடம் ஒதுக்கி கொடுத்து, கோயில் நிலத்தில் உள்ள பள்ளியை அப்புறப்படுத்தி, அந்த இடத்தை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று கடந்த 2024-ம் ஆண்டு உத்தரவிட்டது.

  ஆனால், உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி, ஐஏஎஸ் அதிகாரிகளான தமிழக வருவாய் துறை செயலர் அமுதா, பள்ளிக்கல்வித் துறை செயலர் மதுமதி, அறநிலையத் துறை செயலர் சந்திரமோகன், அறநிலையத் துறை ஆணையர் ஸ்ரீதர், கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் மற்றும் அறநிலைய துறை இணை ஆணையர் பரணிதரன், தேவநாதசுவாமி கோயில் செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக வினோத் ராகவேந்திரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

   இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டது.

   இந்நிலையில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி சுந்தர்மோகன் அமர்வில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமுதா உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் 5 பேர் மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள் ஆஜராகினர்.

மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம்: நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தியதற்காக மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர். அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, கடலூர் மாவட்டம் புவனகிரி தாலுகா பெரியபட்டு என்ற கிராமத்தில் அந்த பள்ளிக்கு 4.73 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறி, அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்தார்.

   அப்போது பள்ளி நிர்வாகம் தரப்பில், 'தற்போது அரசு ஒதுக்கியுள்ள இடம் கடலூரில் இருந்து 32 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. தவிர, அங்கு குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. முறையான சாலை வசதி இல்லை. எனவே, கடலூர் நகரில் 5 கி.மீ. சுற்றளவுக்குள் பள்ளிக்கு நிலம் ஒதுக்கி தரவேண்டும்' என்று கோரப்பட்டது.

  அதற்கு அரசு தரப்பில், 'பிரதான சாலையில் இருந்து தற்போது ஒதுக்கப்பட்டுள்ள இடத்துக்கு சாலை வசதி ஏற்படுத்தி தரப்படும்' என்று உறுதி அளிக்கப்பட்டது.

  இதையடுத்து, பள்ளிக்கு வேறு இடம் ஒதுக்கி தரவேண்டும் என்று அரசுக்கு விண்ணப்பிக்குமாறு பள்ளி நிர்வாகத்துக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், அந்த கோரிக்கையை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்குமாறு வருவாய் துறை செயலருக்கு உத்தரவிட்டு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

  நீதிமன்றத்திலிருந்து வெளியேறிய மேற்படி ஐஏஎஸ் அதிகாரிகளை அங்கிருந்த ஊடகவியலாளர்கள் படம் எடுத்தனர். அதற்கு சிறு ஆட்சேபனையை அவர்கள் வெளிக்காட்டினர்.