ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களுடன் நடைபெற்ற நறுவீ இல்ல திருமண வரவேற்பு விழா!

ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களுடன் நடைபெற்ற நறுவீ இல்ல திருமண வரவேற்பு விழா!

ம.பா.கெஜராஜ்,

 பொதுவாக பெரிய இடத்து திருமணம் என்றால் அதில் ஒரு குறிப்பிட்ட வர்கத்தினருக்கு மட்டுமே அழைப்பு இருக்கும் என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் பார்த்து வருகிறோம்.

 ஆனால் நறுவீ மருத்துவமனை இல்ல திருமண நிகழ்ச்சியில் அதையெல்லாம் கடந்து சுமார் 600 ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களை சிறப்பிக்கும் வகையில் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்கள். இதனால் அதில் பங்கேற்றவர்களுக்கு மனதளவில் உற்சாகத்தையும் கவுரவத்தையும் அளித்திருக்கிறார் நிறுவனர் ஜி.வி.சம்பத்.

இது பற்றின விவரம் வருமாறு,

 வேலூர் நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி.வி. சம்பத் - அனிதா சம்பத் தம்பதியரின் மகன் நிதின் சம்பத்க்கும், சென்னை அடையாறு ஆனந்த பவன் குழும நிர்வாக இயக்குநர் கே.டி. வெங்கடேசன் - லலிதா வெங்கடேசன் தம்பதியரின் மகள் அபிராமிக்கும் சென்னையை அடுத்த நீலாங்கரை பகுதியில் அமைந்துள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் கடந்த 5 ஆம் தேதி திருமணம் சிறப்பாக நடைபெற்றது.

          இத்திருமண விழாவையொட்டி வேலூர் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு சிறப்பு செய்யும் வகையில் கந்தனேரி பகுதியில் அமைந்துள்ள நறுவீ கன்வென்ஷன் சென்டரில் சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

  இந்த நிகழ்ச்சியில் மணமக்கள் நிதின் சம்பத் - அபிராமி தம்பதி பங்கேற்க, சச்சின் இசை குழுவினரின் புல்லாங்குழல் மற்றும் வீனை கச்சேரி நடைபெற்றது.

 இந்நிகழ்ச்சியில் வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் அமைந்துள்ள நம்பிக்கை இல்லம், கசம் முதியோர், பாலர் குடும்ப கிராம பண்ணை, தாராபடவேடு ஆத்ம சாந்தி முதியோர் இல்லம், அரியூர் ஸ்ரீ சாய் தஞ்சம் முதியோர் இல்லம், வேலப்பாடி வள்ளலார் முதியோர் இல்லம் மற்றும் வேலூர் உதவும் உள்ளங்கள் அமைப்பின் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்கள் என 600-க்கும் மேற்பட்டவர்களுக்கு இனிப்புடன் கூடிய அறுசுவை உணவு மற்றும் பரிசு பொருட்களை நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி.வி. சம்பத் வழங்கினார்.

          இது சம்மந்தமாக நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி.வி. சம்பத் கூறுகையில்: எனது மகன் நிதின் சம்பத் - அபிராமி திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் ஒரு பகுதியானது ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களை கொண்டு நடத்திட திட்டமிடப்பட்டது.

 அந்த வகையில் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் எந்தவித இடையூறும் இல்லாமல் அவர்களை மகிழ்வித்து சிறப்பு செய்யும் வகையில் அதற்கான ஏற்பாடு செய்யபட்டது.

  இந்த நிகழ்ச்சியில் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்கள் பங்கேற்பதற்க்காக மேற்சொன்ன பகுதியிலிருந்து வரும் வகையில் தனி தனி வாகன வசதி செய்யப்பட்டது. எங்கள் குடும்ப திருமண நிகழ்ச்சிகளில் ஆதரவற்றோர்களுக்கு உணவு அளிப்பதை நாங்கள் வெகு காலமாக பின்பற்றி வருகிறோம். மற்றவர்கள் இதை கடைபிடிக்க முன்னோடியாக இருக்கும் வகையில் அதனை செய்து வருகிறோம்.

          இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி.வி. சம்பத் - அனிதா சம்பத் தம்பதியினர், அடையாறு ஆனந்த பவன் குழும நிர்வாக இயக்குநர்கள் கே.டி. வெங்கடேசன் - லலிதா தம்பதியினர், கே.டி. சீனிவாச ராஜா - ஆனந்தி தம்பதியினர் மற்றும் இயக்குநர் விஷ்ணு சங்கர் - சுவேதா தம்பதியினர் மற்றும் நண்பர்கள், நறுவீ குழுமத்தினர் வரவேற்று சிறப்பித்தனர்.